Last Updated : 28 Jan, 2015 05:59 PM

 

Published : 28 Jan 2015 05:59 PM
Last Updated : 28 Jan 2015 05:59 PM

இந்திய அணியின் உ.கோப்பை வாய்ப்புகளை புறமொதுக்குவது முட்டாள்தனம்: நியூசி. முன்னாள் வீரர் ஜெஃப் ஆலட்

1999-ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் விளையாடிய நியூசி. வேகப்பந்து வீச்சாளர் ஜெஃப் ஆலட், இந்த உலகக்கோப்பையில் இந்திய அணியின் வாய்ப்பை குறைத்து மதிப்பிடுவது முட்டாள் தனம் என்று கூறியுள்ளார்.

ஜெஃப் ஆலட் 1999-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டிகளில் 23 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது, முத்தரப்பு ஒருநாள் தொடரில் கடந்த உலகக்கோப்பை சாம்பியன்கள் என்ற எந்த வித சாயலுமில்லாமல் ஆடி வரும் இந்திய அணி வீரர்களின் காயங்கள், ஃபார்ம் இன்மை, மோசமான பந்துவீச்சு என்று கடுமையான பின்னடைவுகளைச் சந்தித்து வரும் நிலையில், ஜெஃப் ஆலட் இந்தியாவை இதற்குள் புறமொதுக்க முடியாது என்று ஆறுதலாகக் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, “இந்தியாவை இதற்குள் புறமொதுக்குவது முட்டாள்தனம். என்னுடைய மதிப்பீடு என்னவெனில், ஒவ்வொரு போட்டியில் இந்தியா ஆடும் போதும் அது ஒரு மிகப்பெரிய போட்டியாகவே உள்ளது. இப்போதைக்கு முடிவுகள் அவர்களுக்கு சாதகமாக அமையவில்லை. ஆனால், மற்ற அணிகளுக்கு இல்லாத அனுகூலம் அந்த அணிக்கு உள்ளது. அது என்னவெனில், ஆஸ்திரேலிய பிட்ச்களில் அந்த அணி சமீபமாக தொடர்ந்து விளையாடி வருகிறது.

இது மற்ற அணிகளுக்கு எதிராக இந்தியா விளையாடும்போது பெரிய அளவுக்கு உதவும். எனவே இந்தியாவின் வாய்ப்புகளை முத்தரப்பு ஒருநாள் தொடரை வைத்து எடைபோட முடியாது.

மேலும் கிரிக்கெட் என்பது அந்தந்த தினத்தில் ஆட்டம் அமைவதைப் பொறுத்தது. இந்திய அணி ஏற்கெனவே 2 முறை உலகக்கோப்பையை வென்றுள்ளது. ஆனால் நியூசிலாந்து போன்ற அணிகள் 6 முறை அரையிறுதிக்குள் நுழைந்தும் ஒரு முறை கூட கோப்பையை வெல்ல முடியவில்லை. எனவே இந்திய அணியின் வாய்ப்புகளை அதற்குள் மூட்டைக் கட்டிவிடக்கூடாது.” என்றார் ஜெஃப் ஆலட்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x