Published : 25 Oct 2014 09:09 PM
Last Updated : 25 Oct 2014 09:09 PM

ஆஸ்திரேலியாவைத் தோல்வியின் முனைக்குத் தள்ளிய பாகிஸ்தான்

துபாயில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவை கடும் நெருக்கடிக்குள்ளாக்கி, தோல்வியை நோக்கித் தள்ளியுள்ளது.

வெற்றி பெற 438 ரன்கள் தேவை என்ற மிகப்பெரிய இலக்கை நிர்ணயித்த பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவை இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை இழக்கச் செய்துள்ளது. 4ஆம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 59/4.

டேவிட் வார்னர், அலெக்ஸ் டூலன், மைக்கேல் கிளார்க், இரவுக்காவலனாக இறக்கப்பட்ட நேதன் லயன் ஆகிய நாலவரும் ஆட்டமிழந்தனர். இடது கை சுழற்பந்து வீச்சாளர் சுல்பிகர் பாபர் 2 விக்கெட்டுகளையும் இளம் லெக் ஸ்பின்னர் யாசிர் ஷா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

ஸ்டீவன் ஸ்மித் 3 ரன்களுடனும் தொடக்க வீரர் கிறிஸ் ராஜர்ஸ் 23 ரன்களுடனும் களத்தில் நிற்கின்றனர். நாளை 90 ஓவர்களையும் பாகிஸ்தான் ஸ்பின் பந்தை வெற்றிகரமாக எதிர்கொண்டு ஆஸ்திரேலியா டிரா செய்வது மிக மிகக் கடினம் என்றே தெரிகிறது.

4-வது இன்னிங்ஸை ஓரளவுக்கு சிறப்பாகத் தொடங்கிய ஆஸ்திரேலியா 44/0 என்று இருந்தது. அப்போது 14வது ஓவரில் இடது கை சுழற்பந்து வீச்சாளர் சுல்பிகர் பாபர் டேவிட் வார்னர் (29) விக்கெட்டை ஸ்டம்ப்டு முறையில் கைப்பற்றினார். அதே ஓவரில் டூலனை எல்.பி. செய்தார்.

கேப்டன் மைக்கேல் கிளார்க் இளம் லெக்ஸ்பின்னர் யாசிர் ஷா பந்தில் நெருக்கமான எல்.பி முறையீட்டில் தப்பித்தார். ஆனால் அவரிடமே 3 ரன்களில் எல்.பி. ஆகி வெளியேறினார். அதே ஓவரில் இரவுக்காவலன் நேதன் லயனையும் யாசிர் ஷா வீழ்த்தினார்.

முன்னதாக அகமது ஷேஜாத் 131 ரன்களையும், யூனிஸ் கான் 103 ரன்களையும் எடுக்க பாகிஸ்தான் 286/2 என்று டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்ஸ் முன்னிலை 151 ரன்கள். ஆஸி.க்கு இலக்கு 438 ரன்கள். 38/0 என்று தொடங்கிய பாகிஸ்தான், யூனிஸ், மற்றும் ஷேஜாத் மூலம் 168 ரன்கள் 2வது விக்கெட்டுக்காக சேர்த்தது.

அகமது ஷேஜாத் சதம் எடுத்து முடித்த பிறகு ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் பீட்டர் சிடிலை 2 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் அடித்தார். ஷேஜாதிற்கு இன்னிங்ஸ் தொடக்கத்திலேயே விக்கெட் கீப்பர் பிராட் ஹேடின் கேட்ச் விட்டது குறிப்பிடத்தக்கது.

நாளை ஆட்டத்தின் 5-வது நாள். ஆஸ்திரேலியா தோல்வியைத் தவிர்ப்பது கடினமே.

ஆஸ்திரேலிய கேப்டன் கிளார்க் கூறியதாவது:

"என்னுடைய ஆட்டம் எனக்கு பெரும் ஏமாற்றமளிக்கிறது. நான் யாரையும் குற்றம் சொல்லவோ விமர்சிக்கவோ விரும்பவில்லை. கிரிக்கெட்டின் அனைத்து விஷயங்களிலும் நாங்கள் தோற்கடிக்கப்பட்டு விட்டோம்.

நாளை போராட வேண்டும், பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.” இவ்வாறு கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x