Published : 26 Jun 2018 03:52 PM
Last Updated : 26 Jun 2018 03:52 PM

மெஸ்ஸிக்கு இன்று பிரியாவிடை அளிப்போம்: பயிற்சியாளருக்கே பிடிக்காத நைஜீரிய வீரரின் பேச்சு

இன்று செயிண்ட் பீட்டர்ஸ்பர்கில் நடைபெறும் உலகக்கோப்பை முக்கியக் கால்பந்து போட்டியில் நைஜீரியா, அர்ஜெண்டினா அணிகள் வாழ்வாசாவா போட்டியில் மோதுகின்றன.

இந்நிலையில் நைஜீரியா அணியின் ஃபுல் பேக் வீரர் பிரையன் இடோவு, இன்று அர்ஜெண்டினாவை வெளியேற்றுவதோடு மெஸ்ஸிக்கும் பிரியாவிடை கொடுப்போம் என்று பேசியது நைஜீரியா பயிற்சியாளருக்கே பிடிக்கவில்லை.

இடோவூ கூறும்போது, “ஆம் அதுதான் எங்கள் முக்கிய இலக்கு. அவருக்கு இதுவே கடைசி உலகக்கோப்பை போட்டியாக இருக்க வேண்டும் அதுதான் இலக்கு, அவர் விளையாடுவதைப் பார்க்க எந்த அளவுக்கு விரும்புகிறேனோ அதே அளவுக்கு எங்களுக்கு எதிராக அவர் ஆடுகிறார் என்பதால் எங்களுக்கு இதுதான் ஒரே தெரிவு.

ஆனால் அவருடன் சீருடையை மாற்றிக் கொள்ளவும் விரும்புகிறேன் அவர் மட்டுமல்ல அர்ஜெண்டினாவின் மற்றவீர்ர்களுடனும் சீருடையை பரிமாற்றம் செய்து கொள்ள விரும்புகிறேன்” என்றார்.

ஆனால் இவரது பேச்சை நைஜீரியாவின் தலைமைப் பயிற்சியாளர் கெர்னாட் ரோர் இடோவூவின் இந்தப் பேச்சை மறுத்தார், “இல்லை இல்லை, நாங்கள் மெஸ்ஸி பற்றி யோசிக்கவில்லை, எங்கள் ஆட்டத்தில் கவனம் செலுத்தவே விரும்புகிறோம்.

மெஸ்ஸிக்கு இது கடைசி உலகக்கோப்பையா இல்லையா என்பது எங்கள் பிரச்சினையல்ல. நாங்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதுதான் எங்கள் கவனம். அவர் விளையாடுவதைப் பார்க்க நாங்கள் இங்கு வரவில்லை. முடிவு நோக்கி பயணிக்கிறோம். நாங்கள் தொழில்நேர்த்தியானவர்கள், நைஜீரியாவின் வண்ணங்கள் பறக்க வேண்டும்.

கால்பந்தில் கருணையோ, பரிவோ கிடையாது, பரிசளித்து விடக்கூடாது, எந்த வீரரையும் நமக்கு தனிப்பட்ட முறையில் பிடித்திருந்தாலும் நாம் விட்டுக் கொடுக்க முடியாது.

ஐஸ்லாந்துக்கு எதிராக மெஸ்ஸி சிறப்பாகவே ஆடினார், அவருக்கு அதிர்ஷ்டம் இல்லை, அதிர்ஷ்டம் இல்லவேயில்லை, பெனால்டி விஷயத்தில் துரதிர்ஷ்டமே அவருக்கு எஞ்சியது. அவர் நல்ல உடல்தகுதியில் இருக்கிறார், நாங்கள் அவரிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்றார் ரோர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x