Last Updated : 10 Jun, 2018 06:19 PM

 

Published : 10 Jun 2018 06:19 PM
Last Updated : 10 Jun 2018 06:19 PM

மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட்: 6 முறை சாம்பியனான இந்தியாவை வீழ்த்தி வங்கதேசம் சாம்பியன்

கோலாலம்பூரில் நடந்த மகளிருக்கான ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில், நடப்பு சாம்பியனும், 6 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து முதல் முறையாக கோப்பையை வென்றது வங்கதேச அணி.

கோலாலம்பூரில் உள்ள கின்ராரா அகாடெமி ஓவல் மைதானத்தில் கடந்த ஒரு வாரமாக ஆசியக்கோப்பை டி20 போட்டி நடந்து வந்தது. இன்று நடந்த இறுதிப்போட்டியில், நடப்பு சாம்பியன் இந்திய அணியை எதிர்கொண்டது வங்கதேச அணி. டாஸ் வென்ற வங்கதேச மகளிர் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.

முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். வங்கதேச வீராங்கனைகளின் சிறப்பான பந்துவீச்சால் இந்திய வீராங்கனைகள் தொடக்கத்தில் இருந்தே விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் இழந்து வந்தனர்.

9 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 32 ரன்கள் மட்டுமே இந்திய வீராங்கனைகள் சேர்த்திருந்தனர். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், வேதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஓரளவுக்கு நிதானமாக ஆடி ரன்களைச் சேர்த்தனர். அதன்பின் வேதா 11 ரன்களிலும் அடுத்து வந்த பாட்டியா(3) பாண்டே(1) கோஸாமி(10) ரன்களில் ஆட்டமிழந்தனர். சிறப்பாக ஆடிய கேப்டன் கவுர் அரைசதம் அடித்து 56 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் சேர்த்தனர். வங்கதேசம் தரப்பில் ருமானா அகமது, குப்ரா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்கள்.

113 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளிய இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் சேர்த்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய வீராங்கனைகள் பூனம் யாதம், கவுர் சிறப்பான பந்துவீச்சால், வங்கதேச அணிக்கு கடும் நெருக்கடிகள் அளித்தனர். இதனால், 16 ஓவர்களில் 84 ரன்களுக்கு கொண்டு வந்தனர். இதனால், ஆட்டம் கணிக்க முடியாமல் சென்றது,

கடைசி வரிசையில் களமிறங்கிய பாகிமா கவுதூன்(9), சஞ்ஜிதா இஸ்லாம்(5) ஆகியோர் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்ததால் பரபரப்பு அடைந்தது.

ஆனால் கடைசி ஓவரில் வங்கதேச வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், முதல் 3 பந்துகளில் பவுண்டரி உள்ளிட்ட ஹர்மன்பிரீத் 6 ரன்கள் விட்டுக்கொடுத்ததே ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. இறுதி வரை போராடிய ருமானா அகமது 23 ரன்கள் சேர்த்து அணியை வெற்றி பெற வைத்து ரன் அவுட் ஆகினார்.

இந்தியா தரப்பில் பூனம் யாதவ் 4 விக்கெட்டுகளையும், கவுர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். ஆட்டநாயகி விருது ருமானா அகமதுவுக்கும், தொடர் நாயகி விருது ஹர்பிரீத் கவுருக்கும் வழங்கப்பட்டது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x