Published : 30 May 2018 07:41 AM
Last Updated : 30 May 2018 07:41 AM

ஐபிஎல் போட்டியில் சாம்பியன்: சிஎஸ்கே வீரர்கள் சென்னையில் உற்சாகம்

ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

11-வது ஐபிஎல் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கியது. 2 ஆண்டு தடைக்குப் பிறகு இந்த ஆண்டில் சென்னை அணி உற்சாகமாக களமிறங்கி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு நடந்த இறுதி ஆட்டத்தில் சென்னை அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது. சிஎஸ்கே அணி வீரர் ஷேன் வாட்சன் அபாரமாக ஆடி 117 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

2 ஆண்டு தடைக்குப் பிறகு களமிறங்கியபோதும் சிஎஸ்கே அணி கோப்பையை வென்றது வீரர்களிடையேயும், அணி நிர்வாகிகளிடையும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், சாம்பியன் கோப்பையுடன் அணி வீரர்கள் நேற்றுமுன்தினம் மாலை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்து சேர்ந்தனர். வீரர்கள் விமான நிலையம் வந்ததும் அங்கு குழுமியிருந்த ரசிகர்கள் அவர்களை வரவேற்று வாழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து நேற்றுமுன்தினம் இரவு அணி நிர்வாகம் சார்பில் சிஎஸ்கே அணி வீரர்கள், பயிற்சியாளர், நிர்வாகிகளுக்கு தனியார் ஓட்டலில் விருந்தளிக்கப்பட்டது. இதில் வீரர்கள் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அணி நிர்வாகிளுடன் உற்சாகமாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பின்னர் கோப்பையுடன் கோயிலுக்குச் சென்று அணி வீரர்கள் வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் சிஎஸ்கே அணி வீரர்கள், நிர்வாகிகளின் குடும்பத்தாரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

முன்னதாக விமானத்தில் வந்தபோது சிஎஸ்கே வீரர்களுடன் விமான பணிப்பெண்கள், விமானிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x