Last Updated : 27 May, 2018 10:24 AM

 

Published : 27 May 2018 10:24 AM
Last Updated : 27 May 2018 10:24 AM

சர்ச்சையில் சிக்கிய நெதர்லாந்து

1974-ம் ஆண்டு 10-வது உலகக்கோப்பை தொடரை மேற்கு ஜெர்மனி நடத்தியது. சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு வழங்கப்பட்டு வந்த ஜூலிஸ் ரிமிட் என்ற பெயரிலான கோப்பையை பிரேசில் 3 முறை வென்று சொந்தமாக்கிக் கொண்டதால் புதிய கோப்பை வடிவமைக்கப்பட்டது. இத்தாலியைச் சேர்ந்த பிரபல சிற்பி சில்வியோ கசானிகா இதனை வடிவமைத்தார். ஃபிபா உலகக் கோப்பை என்று பெயரிடப்பட்ட இந்த கோப்பை தான் இப்போது வரை சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த உலகக் கோப்பை தொடரில் இயற்கை கடுமையாக விளையாடியது. போட்டி நடைபெற்ற நாட்களில் பெரும்பாலும் மழை பெய்தது. சேறும் சகதியுமான ஆடுகளங்களில்தான் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தத் தொடரில் நெதர்லாந்து அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரையும் வியக்க வைத்தது. அதேவேளையில் நட்சத்திர வீரரான பீலே இல்லாமல் களமிறங்கிய நடப்பு சாம்பியனான பிரேசில் அணி யால் இந்த தொடரில் 4-வது இடத்தையே பிடிக்க முடிந்தது.

போட்டியை நடத்திய மேற்கு ஜெர்மனி அணி, லீக் ஆட்டத்தில் கிழக்கு ஜெர்மனியிடம் தோல்வியடைந்து கடும் நெருக்கடியை சந்தித்தது. எனினும் இந்த தோல்வி ஒருவகையில் அந்த அணிக்கு உதவியாகவே இருந்தது. ஏனெனில் அடுத்த சுற்றில் பலம் வாய்ந்த பிரேசில், அர்ஜென்டினா அணிகளை எதிர்கொள்வதில் இருந்து தப்பித்தது மேற்கு ஜெர்மனி. 2-வது சுற் றில் அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது மேற்கு ஜெர்மனி. அந்த அணி போலந்து, யூகோஸ்லோவியா, ஸ்வீடன் ஆகிய அணிகளை பந்தாடியிருந்தது.

மற்றொரு பிரிவில் ஆதிக்கம் செலுத்திய நெதர்லாந்தும் அனைத்து அணிகளையும் வீழ்த்தி இறுதிப் போட்டியில் கால்பதித்தது. அந்த அணியின் கேப்டன் ஜோகன் குரிஜிஃப் அணியை சிறப்பாக வழிநடத்தினார். அவரது டோட்டல் புட்பால் என்ற புதிய உத்தி பலம் வாய்ந்த பிரேசில், அர்ஜென்டினா ஆகிய அணிகளுக்கு எதிராக பெரிய வெற்றியை பெற்றுத் தந்தது. களத்தில் சிறப்பாக செயல்பட்ட நெதர்லாந்து அணி களத்துக்கு வெளியே பெரிய சர்ச்சையில் சிக்கியது. இறுதிப் போட்டிக்கு முன்னதாக ஜெர்மனியில் உள்ள நாளிதழ் ஒன்று நெதர்லாந்து அணி குறித்து பரபரப்பு செய்தி ஒன்றை வெளியிட்டது.

அதில், 2-வது சுற்றில் பிரேசில் அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்னதாக நெதர்லாந்து வீரர்கள் நிர்வாண விருந்தில் கலந்து கொண்டதாகவும் அதில் அந்த அணியைச் சேர்ந்த 4 வீரர்கள், ஜெர்மனியை சேர்ந்த இரு பெண்களுடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் தங்களிடம் இருப்பதாக தெரிவித்திருந்தது. ஆனால் அந்த புகைப்படங்கள் வெளியாகவில்லை. இந்த செய்தியானது நெதர்லாந்து அணியை உருக்குலையச் செய்தது. மறுநாள் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நெதர்லாந்து அணி 1-2 என்ற கோல் கணக்கில் மேற்கு ஜெர்மனியிடம் வீழ்ந்து பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x