Published : 27 May 2018 04:45 AM
Last Updated : 27 May 2018 04:45 AM

3-வது முறையாக பட்டம் வெல்லுமா சிஎஸ்கே?; மும்பை வான்கடே மைதானத்தில் இன்று ஐபிஎல் இறுதி ஆட்டம்- சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் பலப்பரீட்சை

ஐபிஎல் டி 20 தொடரின் இறுதி ஆட்டத்தில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் திருவிழா கடந்த ஒன்றரை மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்றுடன் நிறைவு பெறுகிறது. சாம்பியன் பட்டம் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதி ஆட்டத்தில் இரு முறை சாம்பியனான தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த 2016-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை இன்று மும்பை வான்கடே மைதானத்தில் எதிர்கொள்கிறது. இதே மைதானத்தில் தான் இரு அணிகளும் கடந்த 5 நாட்களுக்கு முன்பு தகுதி சுற்று 1 ஆட்டத்தில் மோதியிருந்தன.

அந்த ஆட்டத்தில் 140 ரன்கள் இலக்கையே துரத்திய போதிலும் 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணி ஒரு கட்டத்தில் 92 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து கடும் நெருக்கடியை சந்தித்தது. எனினும் டு பிளெஸ்ஸிஸ் அபாரமாக விளையாட பரபரப்பான அந்த ஆட்டத்தில் 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை அணி 7-வது முறையாக இறுதிப் போட்டியில் கால் பதித்தது. இந்த சீசனில் லீக் சுற்றில் இருமுறை மற்றும் பிளே ஆஃப் என 3 முறை ஹைதராபாத் அணியை வீழ்த்தி உள்ள சென்னை அணி மீண்டும் ஒரு முறை அந்த அணிக்கு எதிராக ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கக்கூடும்.

வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணி தகுதி சுற்று 1-ல் வெற்றியை தவறவிட்ட நிலையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை அதன் சொந்த மண்ணிலேயே 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை பெற்றுள்ளது. கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டம் முடிவடைந்த கையோடு அந்த அணி இறுதிப் போட்டியில் பங்கேற்பதற்காக மும்பைக்கு பயணமானது. கடந்த 4 நாட்களில் இரு முக்கிய ஆட்டங்களை சந்தித்த அந்த அணி தற்போது கோப்பையை வெல்வதற்கான ஆட்டத்தில் மிகுந்த களைப்புடன் சென்னையை சந்திக்கிறது. அதேவேளையில் இந்த 4 நாட்கள் ஓய்வானது சென்னை அணிக்கு புத்துணர்ச்சியை கொடுத்திருக்கக்கூடும்.

ஹைதராபாத் அணியின் வெற்றிகளில் ஆப்கானிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கான் முக்கிய பங்களிப்பு செய்து வருகிறார். கொல்கத்தாவுக்கு எதிராக நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் ஆல்ரவுண்டராக உருவெடுத்த அவர், அனைத்து துறைகளிலும் மேம்பட்ட திறனை வெளிப்படுத்தினார். பந்து வீச்சில் 4 ஓவர்கள் வீசி 19 ரன்களை விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்களை வீழ்த்திய அவர், பேட்டிங்கின் போது 10 பந்துகளில் 34 ரன்கள் விளாசி மிரளச் செய்தார். மேலும் பீல்டிங்கின் போது இரு முக்கிய கேட்ச்கள் மற்றும் ஒரு ரன் அவுட்டையும் நிகழ்த்தி ஹைதராபாத் அணியை இறுதிப் போட்டிக்குள் அழைத்துச் சென்றார்.

முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் சென்னை அணி பேட்ஸ்மேன்களுக்கும் தொல்லை கொடுக்க ரஷித் கான் தவறவில்லை. அந்த ஆட்டத்தில் முக்கியமான கட்டத்தில் தோனியை தனது கூக்ளி பந்து வீச்சால் போல்டாக்கி மிரட்டிய அவர் அதன் பின்னர் டுவைன் பிராவோவையும் வெளியேற்ற சென்னை அணி 62 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து கடும் நெருக்கடிக்கு ஆளானது. 4 ஓவர்களை வீசிய ரஷித் கான் வெறும் 11 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தார். முக்கியமான இந்த ஆட்டத்தில் கடைசி வரை களத்தில் நிலைப்பெற்று வெற்றி தேடிக் கொடுத்த டுபிளெஸ்ஸிஸ் கூட ரஷித் கான் தனது ஓவர்கள் கோட்டாவை முடித்த பிறகே மட்டையை சுழற்றினார்.

டுபிளெஸ்ஸிஸும் அந்த ஆட்டத்தில் ரஷித் கான் சுழலில் எல்பிடபிள்யூ முறையில் சிக்கினார். ஆனால் அதிர்ஷ்டவசமாக மேல்முறையீடு செய்து ஆட்டமிழப்பதில் இருந்து தப்பித்தார். ஆட்டத்தை வென்று கொடுத்த பின்னர் டு பிளெஸ்ஸிஸ் கூறுகையில், “ரஷீத் கான் உண்மையிலேயே சிறந்த பந்துவீச்சாளர். அவர் பந்துகளை கணிக்க முடியவில்லை. அதனால்தான் அவர் ஓவர் முடியட்டும் என்று காத்திருந்தோம்.

ரஷித் கான் உலகின் தலைசிறந்த லெக் ஸ்பின்னர். அவர் தன் சொந்தத் திறமையிலேயே போட்டிகளை வென்று கொடுப்பார். அதனால் அவரது பந்து வீச்சுக்கு மரியாதை கொடுத்து விளையாடவேண்டும். நிறைய வீடியோ பதிவுகளைப் பார்த்தும் அவருக்கு எதிராக சிறப்பாக விளையாட முடியவில்லை” என்றார். இதில் இருந்தே ரஷித் கானின் பந்து வீச்சு எந்த அளவுக்கு எதிரணிக்கு அபாயத்தை விளைவிக்கும் என்பது புலனாகும்.

இந்த சீசனில் 16 ஆட்டங்களில் 21 விக்கெட்கள் வேட்டையாடி உள்ள ரஷித் கானுக்கு பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவுல் ஆகியோரும் பக்கபலமாக உள்ளனர். இறுதி கட்ட ஓவர்களில் அசத்தி வரும் சித்தார்த் கவுலும் இந்த சீசனில் 21 விக்கெட்கள் கைப்பற்றி உள்ளார். இந்த பந்து வீச்சு கூட்டணி சென்னை அணியின் பேட்டிங் வரிசையை பதம் பார்க்க மீண்டும் ஒரு முறை முயற்சிக்கும். இதேபோல் கார்லோஸ் பிராத் வெயிட்டின் ஆல்ரவுண்டர் திறனாலும் சென்னை அணி சிறிது சிக்கலை சந்திக்கக்கூடும்.

தகுதி சுற்று ஆட்டத்தில் இவர் கடைசி கட்டத்தில் 43 ரன்கள் விளாசி மிரட்டியிருந்தார். கடந்த 2016-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பையில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய அவர், கொல்கத்தாவுக்கு எதிராக நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் கடைசி ஓவரை அற்புதமாக வீசியிருந்தார். எதிரணியின் வெற்றிக்கு 19 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் இரு விக்கெட்களை கைப்பற்றியதுடன் வெறும் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

பேட்டிங்கில் வில்லியம்சன் மீண்டும் பார்முக்கு திரும்புவது அவசியம். இந்த சீசனில் 688 ரன்கள் குவித்துள்ள அவர், கடைசி இரு ஆட்டங்களில் சிறந்த திறனை வெளிப்படுத்தத் தவறினார். சீரற்ற வகையில் விளையாடி வரும் ஷிகர் தவணும் மட்டையை சுழற்றினால் பலம் சேர்க்கலாம். தொடரின் இறுதிப் பகுதிக்கு வந்த பிறகும் அணியின் நடுகள பேட்டிங் புத்துயிர் பெறாதது பலவீனமாக கருதப்படுகிறது. இந்த வரிசையில் ஒருசில மாற்றங்களை வில்லியம்சன் மீண்டும் மேற்கொள்ளக்கூடும்.

3-வது முறையாக பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்கும் சென்னை அணியின் பேட்டிங் வலுவாக உள்ளது. அம்பாட்டி ராயுடு (586), தோனி (455), ஷேன் வாட்சன் (438), சுரேஷ் ரெய்னா (413) ஆகியோர் சிறந்த பார்மில் உள்ளனர். இந்த பேட்டிங் கூட்டணி மீண்டும் ஒரு முறை மட்டையை சுழற்ற ஆயத்தமாக உள்ளது. டு பிளெஸ்ஸிஸ், டுவைன் பிராவோ ஆகியோருடன் பின்கள வரிசையில் ஹர்பஜன் சிங்,ஷர்துல் தாக்குர், தீபக் ஷகார் ஆகியோரும் பேட்டிங் திறனை பெற்றிருப்பது அணிக்கு கூடுதல் வலு சேர்க்க்கிறது.

சென்னை அணியின் பந்து வீச்சும் பலம் அடைந்துள்ளது. லுங்கி நிகிடி, தீபக் ஷகார், ஷர்துல் தாக்குர் ஆகியோரை உள்ளடக்கிய வேகக் கூட்டணி ஹைதராபாத் அணிக்கு நெருக்கடி கொடுக்கக்கூடும். இதேபோல் ஷேன் வாட்சன், டுவைன் பிராவோ ஆகியோரது அனுபவம் வலுசேர்க்கும் என கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x