Published : 25 May 2018 07:27 AM
Last Updated : 25 May 2018 07:27 AM

நாய்கள் ஓட்டப்பந்தயமும் 1966 உலகக் கோப்பையும்..

1996-ல் நடைபெற்ற 8-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியை இங்கிலாந்து நடத்தியது. இந்தத் தொடரில்தான் முதன்முறையாக போட்டிக்கான சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது. இங்கிலாந்து உலகக் கோப்பையின் சின்னமாக சிங்கம் அறிவிக்கப்பட்டு அதற்கு வில்லி என்று பெயர் சூட்டப்பட்டது. இந்தத் தொடரில் நடப்பு சாம்பியனான பிரேசில் கடும் பின்னடைவை சந்தித்தது. முதல் ஆட்டத்தில் பல்கேரியாவுக்கு எதிராக 2-0 என பிரேசில் வென்றது.

இந்த ஆட்டத்தில் பீலேவும், கரிஞ்சாவும் கோல் அடித்தனர். ஹங்கேரிக்கு எதிரான ஆட்டத்தில் காயம் காரணமாக பீலே விளையாடவில்லை. இதில் 1-3 என்ற கணக்கில் பிரேசில் வீழ்ந்தது. அரை இறுதிக்கு தகுதி பெற முடியாத நிலைக்கு பிரேசில் தள்ளப்பட்டது. இதனால் தொடர்ந்து இருமுறை கோப்பையை வென்ற பிரேசில் முதல் சுற்றுடன் வெளியேறியது. 3 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வென்ற பிரேசில் அணியால் தொடரில் 11-வது இடத்தையே பிடிக்க முடிந்தது. அரை இறுதி ஆட்டங்களில் மேற்கு ஜெர்மனி 2-1 என்ற கோல் கணக்கில் சோவியத்யூனியனையும், இங்கிலாந்து 2-1 என்ற கோல் கணக்தில் போர்ச்சுக்கலையும் வென்றன.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து - மேற்கு ஜெர்மனி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களில் இரு அணிகளும் தலா இரு கோல்கள் அடிக்க ஆட்டம் 2-2 என சமநிலையில் இருந்தது.

இதையடுத்து கூடுதல் நேரத்தில் இங்கிலாந்து 4-2 என்ற கோல் கணக்கில் மேற்கு ஜெர்மனியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. சார்லஸ் ஹர்ஸ்ட் ஹாட்ரிக் கோல்கள் அடித்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். இந்த ஆட்டத்தில் அவர், அடித்த 2-வது கோல் சர்ச்சைக்குள்ளானது.

இந்த உலகக் கோப்பையில் சுவாரசியமான சம்பவம் ஒன்றும் நடைபெற்றது. இங்கிலாந்து அணி லீக் சுற்றில் குரூப் 1-ல் இடம் பெற்றிருந்தது. இந்த பிரிவில் இடம் பெற்றுள்ள அனைத்து அணிகளின் ஆட்டமும் வெம்ப்ளே மைதானத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் பிரான்ஸ் - உருகுவே அணிகள் ஜூலை 15-ம் தேதி இந்த மைதானத்தில் மோத இருந்த ஆட்டம் ஒயிட் சிட்டி மைதானத்துக்கு மாற்றப்பட்டது. அன்றைய தினத்தில் வெம்ப்ளே மைதானத்தில் பாரம்பரியமான முறையில் நடத்தப்படும் நாய்களுக்கான ஓட்டப் பந்தயம் நடத்த திட்டமிட்டிருந்ததால் மைதானத்தின் உரிமையாளர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்த அனுமதிக்கவில்லை.

நவீனகால கால்பந்து போட்டிகள் பிறந்த இடமாக கருதப்படும் இங்கிலாந்தில் அதுவும் முதன்முறையாக உலகக் கோப்பையை நடத்தியபோது நாய்கள் ஓட்டப்பந்தயத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது அனைவருக்கும் சற்று ஆச்சர்யமாக இருந்திருக்கலாம். ஆனால் இதன் பின்னணியில் மற்றொரு காரணமும் பொதிந்திருந்தது. சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு வழங்கப்படும் ‘ஜூல்ஸ் ரைமட் டிராபி’ தொடர் தொடங்குவதற்கு முன்னதாக பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. இது திடீரென காணாமல் போனது. அந்த கோப்பை நாய்களின் உதவியுடன்தான் கண்டுபிடிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x