Last Updated : 22 May, 2018 12:11 PM

 

Published : 22 May 2018 12:11 PM
Last Updated : 22 May 2018 12:11 PM

நடுரோட்டில் ரவிந்திர ஜடேஜாவின் மனைவியின் கன்னத்தில் அறைந்த போலீஸ் கான்ஸ்டபிள்

இந்திய கிரிக்கெட் வீரர் ரவிந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜாவை நடுரோட்டில் அனைவரும் பார்க்கும் வகையில் கன்னத்தில் அறைந்த போலீஸ் கான்ஸ்டபிள் செயலால் பரபரப்பு ஏற்பட்டது

கிரிக்கெட் வீரர் ரவிந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா. இவர், குஜராத்தில் ஜாம்நகரில் வசித்து வருகிறார். வழக்கம்போல் தன்னுடைய சொகுசு காரில் தாய், குழந்தையை அழைத்துக்கொண்டு நேற்று வெளியே சென்றார்.

அப்போது, சாலையில் பைக்கில் சென்ற போலீஸ் கான்ஸ்டபிள் சஞ்சய் அஹிர் மீது ரிவாபாவின் கார் லேசாக உரசியது. இதில் அந்த பைக்கில் சென்ற சஞ்சய் அஹிர் கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டது.

உடனே காரில் இருந்து வெளியே வந்த ஜடேஜாவின் மனைவி ரிபாவாவிடம், சஞ்சய் அஹிர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார், இதனால் சாலையில் கூட்டம் கூடியது. அப்போது திடீரென சஞ்சய் அஹிர், ரிவாபா ஜடேஜாவின் கன்னத்தில் ஓங்கி அறையந்தார். இதில் அவர்நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

இதைப் பார்த்துக்கொண்டிருந்த மக்கள் சஞ்சய் அஹிரை தடுத்து அனுப்பி வைத்தனர். நடுரோட்டில் ஒரு பெண்ணை, அதிலும் கிரிக்கெட் வீரர் ஒருவரின் மனைவியை போலீஸ் கான்ஸ்டபிள் அடித்தது சர்ச்சையானது.

இது குறித்து ஜடேஜாவின் மனைவி ரிவாபா மாவட்ட போலீஸ் எஸ்பி பிரதீப் சஜ்ஜூலிடம் புகார் செய்தார்.

போலீஸ் எஸ்பி கூறுகையில், ரிவாபாவின் கார் அஹிரின் பைக்கில் மோதி இருக்கிறது. இதற்கு முறைப்படி வழக்குப்பதிவு செய்து இருக்கலாம். ஆனால், ரிவாபாவை நடுரோட்டில் அனைவரும் பார்க்கும் வகையில் அஹிர் தாக்கியது குற்றமாகும்.

ரிவாபாவின் புகார் மீது, போலீஸ் கான்ஸ்டபிள் சஞ்சய் அஹிர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

ரவிந்திர ஜடேஜா தற்போது ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார். இன்று இரவு நடக்கும் முதல் ப்ளே ஆப் சுற்றில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைச் சந்திக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x