Published : 21 May 2018 03:15 PM
Last Updated : 21 May 2018 03:15 PM

ஹர்பஜன், சாஹரை சற்றும் எதிர்பாராது இறக்கிய தோனியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்

பொதுவாக கேப்டன் தோனி பாரம்பரிய உத்தி கொண்ட கேப்டனாவார், அதாவது பேட்டிங் வரிசை, பவுலிங் மாற்றம் ஆகியவற்றில் அவர் புதிய பரிசோதனைகளை மேற்கொள்வதில் தயங்குபவர், ஆனால் அவர் ஒவ்வொரு முறை பரிசோதனை செய்யும் போதும் அதில் வெற்றி பெறுகிறார்.

நேற்று பஞ்சாப் அணியை ஸ்விங் மூலம் அடக்கி கெய்ல் 7, ராகுல் டக் அவுட். பிஞ்ச் 4 என்று 16/3 என்று ஆன பஞ்சாப் 19.4 ஓவர்களில் 153 ஆல் அவுட் ஆனது. தொடந்து ஆடிய சென்னையும் ஸ்விங்குக்கு சூப்பர் கிங்ஸ் ராயுடு (1), டுபிளேசிஸ் (14), சாம் பில்லிங்ஸ் (0) ஆகியோரை இழந்து 27/3 என்று தடுமாறியது.

சிஎஸ்கேயின் பிரதான இலக்கு 76 ரன்களை எடுத்து முதல் இரண்டு இடங்களை உறுதி செய்வதாகும். மாறாக கிங்ஸ் லெவன் அணியோ சென்னையை 100 அல்லது அதற்கும் குறைவான ரன்களுக்கு மட்டுப்படுத்தினால் பிளே ஆஃபுக்கு தகுதி என்ற நிலை இருந்தது.

எப்போதும் தோனியே இம்மாதிரி சூழ்நிலைகளில் இறங்குவார், மேலும் சூழ்நிலையில் நெருக்கடியைப் பொருட்படுத்தாமல் அனாயாச மட்டை சுழற்றிகளான ‘பிஞ்ச்’ ஹிட்டர்களை இறக்குவது தோனிக்கு பெரும்பாலும் பிடிக்காது, இந்நிலையில் நேற்று திடீரென ஹர்பஜன் சிங்கை இறக்கினார். அதாவது தன் விக்கெட் போனாலும் பரவாயில்லை மட்டையை சுழற்றிக் கொண்டிருப்பதுவேயன்றி வெறொன்றுமறியேன் பராபரமே என்று ஆட வேண்டும். இதன் மூலம் பவுலிங்குக்குச் சாதகமான சூழலில் நல்ல பேட்ஸ்மென்களைப் பறிகொடுத்து எதிரணிக்கு அனுகூலம் ஆவதைத் தடுக்கும் உத்தி, அதாவது சிறந்த பேட்ஸ்மென்களை ஓரளவுக்கு நிலைமைகள் சீரடைந்தவுடன் இறக்கி போட்டியை ‘சீல்’ செய்வது. தோனி இந்த சோதனையை மேற்கொண்டது அதிசயிக்க வைத்தது.

 

ஹர்பஜன் சிங் தேவையானதைச் செய்தார் 22 பந்துகளில் 2 பவுண்டரிகள் 1 சிக்ஸ் 19 ரன்கள் விளாசினார், சரி ஹர்பஜனை இறக்கியதை புரிந்து கொள்ள முடிகிறது, ஆனால் அடுத்து சாஹரை இறக்கியது பலரையும் மூக்கின் மேல் விரலை வைக்க வைத்தது, சிலர் தோனியின் இந்த மூவை கேலியும் பேசினர். ஆனால் அவர் இறங்கி 1 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 39 ரன்கள் எடுத்தது கிங்ஸ் லெவன் முகாமில் குழப்பத்தை ஏற்படுத்தியது. அஸ்வினே ஒரு ஓவரில் 19 ரன்கள் விளாசப்பட்டார்.

கடைசியில் தோனி வழக்கம் போல் சிக்சரில் முடித்தார், இம்முறை ஒரு அருமையான ஹுக் ஷாட். லாங் லெக்கில் சிக்ஸ் ஆனது. ரெய்னா 61 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

முன்னதாக குறைந்தது 53 ரன்கள் இடைவெளியில் கிங்ஸ் லெவன் வென்றால் பிளே ஆஃப் தகுதி என்ற நிலை இருந்தது, ஆனால் லுங்கி இங்கிடி, ராகுல், கெய்லை வீழ்த்தினார். பிறகு கடைசியில் அஸ்வின், டை ஆகியோரையும் வீழ்த்தி 4 ஓவர்களில் 10 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தீபக் சாஹர் புதிய சுல்தான் ஆஃப் ஸ்விங் ஆக மாறிவருகிறார். இவர் ஏரோன் பிஞ்சை வீழ்த்தினார். மனோஜ் திவாரி (35), டேவிட் மில்லர் (24) ஆகியோர் மூலம் பஞ்சாப் மீண்டது ஆனால் இருவரையும் ஜடேஜா, பிராவோ ஆகியோர் அடுத்தடுத்து வீழ்த்தினர். கருண் நாயர் மிக அருமையாக ஆடி 26 பந்துகளில் 54 ரன்கள் விளாசினார். 153 ரன்கள் எடுத்து பஞ்சாப் வீழ்ந்தது. ஆட்ட நாயகன் லுங்கி இங்கிடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x