Published : 19 May 2018 09:01 PM
Last Updated : 19 May 2018 09:01 PM

பெங்களூரு வீரர்கள் கோபால், கவுதம் அபாரம்: ஆர்சிபியின் பிளே ஆஃப் கனவு தகர்ந்தது; ராஜஸ்தான் வெற்றி

ஆர்சிபி அணியின் பிளே ஆஃப் கனவுகள் தகர்ந்தது. ராஜஸ்தான் அணியின் பெங்களூரு வீரர்களான ஸ்ரேயஸ் கோபால், மற்றும் கவுதம் ஆகியோரின் ஆட்டத்தினால் ஜெய்பூரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பெங்களூரு அணியை ஐபிஎல் 2018-லிருந்து வெளியேற்றியது.

கள நிலவரம் ஓர் உத்தேசம்:

மும்பை இந்தியன்ஸ் 12 புள்ளிகள் மற்றும் +0.384 நெட் ரன் ரேட்டுடன் உள்ளது, அடுத்த போட்டி டெல்லி டேர் டெவில்ஸுடன் ஆடவிருப்பது இரு அணிகளுக்கும் கடைசி போட்டி இதில் ஏற்கெனவே வெளியேறிய டெல்லி டேர் டெவில்ஸ் வெற்றி பெற்று என்ன பயன்? கொல்கத்தா வெற்றி பெற்று 16 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றாலும்... இன்னொரு இடத்துக்கான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 14 புள்ளிகள் எடுத்தும் நெட் ரன் விகிதம் மைனஸில் உள்ளது. கிங்ஸ் லெவன் சென்னையை வீழ்த்தினாலும் 14 புள்ளிகள் வந்தும் பயனில்லை ஏனெனில் நெட் ரன் விகிதத்தை மைனஸிலிருந்து பிளஸ் ஆக்குவது மிகக் கடினம், கொல்கத்தா இன்று தோற்றாலும் 14 புள்ளிகளுடன் நெட் ரன் விகிதம் மைனசில்தான் இருக்கப் போகிறது. ஒருவேளை இன்றைய ஆட்டத்தில் 165 ரன்கள் இலக்கை ஆர்சிபி 15.5 ஓவர்களில் எடுத்து வென்றிருந்தால் அது 14 புள்ளிகளுடன் பிளஸ் நெட் ரன் விகிதத்திலும் மும்பையுடன் போட்டியில் இறங்க வாய்ப்பிருந்தது. அதுவும் நடக்கவில்லை...

ஆகவே மும்பை இந்தியன்ஸ் தன் கடைசி போட்டியில் வெற்றி பெற்றாலே போதுமானது... அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற ‘ஸ்டேஜ்’ செட் ஆகிவிட்டது. இப்போது 3வது அணியாக மும்பை இந்தியன்ஸ் பிளே ஆஃபுக்குத் தகுதி பெற்றால், 4வது அணி என்ற கேள்வி இருக்கிறது. ஆனால் இப்போதைக்கு மும்பை கடைசி போட்டியில் வென்றாலே போதுமானது என்ற நிலை உள்ளது, 4வது அணிக்கான போட்டி மற்ற 2 அணிகளுக்கு இடையேதான் , இதில் கிங்ஸ் லெவன் அணி கடைசியாக ஆடுவதால் இது நெட் ரன் விகிதத்தில் ராஜஸ்தான் அல்லது கொல்கத்தாவை முறியடிக்க வேண்டும்.

பெங்களூருவை முறியடித்த ராஜஸ்தான் அணியின் பெங்களூரு வீரர்கள்

பெயர்தான் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு, அணியில் ஒரு பெங்களூரு வீரர் கூட இல்லை, ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஷ்ரேயஸ் கோபால், கவுதம் என்ற பெங்களூரு வீரர்கள் இருந்தனர்.

கோபால் 4 பெரிய விக்கெட்டுகளைக் கைப்பற்ற கவுதம் விராட் கோலி என்ற முதலையை முறியடித்ததோடு 2 ஓவர்களில் 6 ரன்களையே விட்டுக் கொடுத்து, பேட்டிங்கில் கடைசியில் இறங்கி 5 பந்துகளில் 2 சிக்சர்களுடன் 14 முக்கியமான ரன்களை விளாசித் தன் பணியைச் செவ்வனே செய்தார். இந்த 2 பெங்களூரு வீரர்கள் பங்களிப்பும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூருவை சாலஞ்ச் இல்லாமல் ஆக்கியது.

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது. 18 ஓவர்களில் 136 என்றுதான் இருந்தது ராஜஸ்தான், ஆனால் கடைசி 2 ஓவர்களில் 28 ரன்கள் இதில் 3 சிக்சர்கள் ஒரு பவுண்டரி. இதனால் 164/5 என்று ஓரளவுக்கு மரியாதைக்குரிய ரன் எண்ணிக்கையை எட்டியது. ஆனால் இது வெற்றி ரன் எண்ணிக்கையாக இருக்கும் என்று ராஜஸ்தான் கருதியிருக்க வாய்ப்பில்லை. ஆனால் கோலியை கவுதம் பவுல்டு செய்தது, பார்த்திவ் படேல், டிவில்லியர்ஸ், மொயின் அலி, மந்தீப் சிங் ஆகியோரை லெக் ஸ்பின்னர் ஸ்ரேயஸ் கோபால் அடுத்தடுத்து வீழ்த்தியது

98/6 என்று சரிவடைய 134 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி ஐபிஎல்-ஐ விட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டது ஆர்சிபி.

இடையில் விராட் கோலி ஆட்டமிழந்த பிறகு ஏ.பி.டிவில்லியர்ஸ், பார்த்திவ் படேல் ஜோடி 34 பந்துகளில் 55 ரன்கள் கூட்டணி அமைத்து 8.2 ஓவர்களில் 75/1 என்ற வலுவான நிலையிலேயே இருந்தது.

அதன் பிறகுதான் ஷ்ரேயஸ் கோபால் தன் அருமையான லெக் ஸ்பின் மூலம் பார்த்திவ் படேல் (33), மொயின் அலி (1),டிவில்லியர்ஸ் (53) ஆகியோரை வீழ்த்தினார், இதில் மொயின் அலி மட்டுமே கோபாலிடம் அவரிடமே கேட்ச் ஆனார். மீது மூவரும் ஸ்டம்ப்டு அவுட். கிளாசன் தன் கிளவ் திறமையை வெளிப்படுத்தினார், கொலின் டி கிராண்ட் ஹோம் இடையில் இஷ் சோதி பந்தில் 2 ரன்களில் வெளியேறினார். சர்பராஸ் கான் 7 ரன்களையும் சவுதி மற்றும் சிராஜ் தலா 14 ரன்களை எடுத்தும் பயனில்லை, சற்று தூரத்திலேயே 134 ரன்களுக்கு பெங்களூரு கதை முடிந்தது. கோபால் 4 ஓவர்களில் 16 ரன்கள் 4 விக்கெட்டுகள் என்று ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.

முன்னதாக ராகுல் திரிபாதியை தொடக்கத்தில் இறக்குவதன் பலனை மீண்டும் ஒரு முறை பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ். அவருடன் ஜோப்ரா ஆர்ச்சரை இறக்கியது பயனளிக்கவில்லை, அவர் உமேஷ் யாதவ் வேகத்துக்கு டக் அவுட் ஆனார். அதன் பிறகு ரஹானே (33), திரிபாதி இணைந்து 99 ரன்களை சேர்த்தனர். திரிபாதி 12வது ஓவரில் அரைசதம் அடித்தார், கொலின் பந்தை நேராக ஒரு சிக்சரும் அடித்தார். மீண்டும் உமேஷ் யாதவ் வர ரஹானேவி எல்.பி. செய்தார். சஞ்சு சாம்சன் அடுத்த உமேஷ் பந்தை நேராக கையில் அடித்து டக் அவுட் ஆனார்.

கிளாசன் அருமையான ஒரு இன்னிங்ஸை ஆடினார். 21 பந்துகளில் 32 ரன்களை அவர் எடுக்க அதில் 3 பவுண்டரிகள் ஒரு சிக்ஸ், இந்த சிக்ஸ் சிராஜின் வைடு யார்க்கரில் பாயிண்டுக்கு மேல் சென்ற அபார ஷாட்டாகும். கவுதம் கடைசி ஓவரில் சவுதியை 2 சிக்சர்கள் அடித்து 5 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தார். கடைசி 2 ஓவர்களில் 28 ரன்கள் ராஜஸ்தான் 164/5. ராகுல் திரிபாதி 58 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

உமேஷ் யாதவ் 25 ரன்களுக்கு 3 விக்கெட், சாஹல் 4-26 என்று சிக்கனம் காட்டினார். இறுதியில் ஆர்சிபி தோற்று வெளியேறியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x