Last Updated : 18 May, 2018 07:11 AM

 

Published : 18 May 2018 07:11 AM
Last Updated : 18 May 2018 07:11 AM

15 நாட்கள் கப்பல் பயணம்

1930-ல்தான் உலகக் கோப்பை கால்பந்து தொடரை ஃபிபா அறிமுகப்படுத்தியது. 1924 மற்றும் 1928-ல் ஒலிம்பிக்கில் சாம்பியன் பட்டம் வென்ற உருகுவே இந்தத் தொடரை நடத்தியது. தகுதி சுற்று போட்டிகள் இல்லாமல் ஃபிபா அமைப்பில் உள்ள 41 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 13 நாடுகள்தான் பங்கேற்றன. எகிப்து அணி கலந்து கொள்ள இருந்த நிலையில் அந்த அணி புறப்பட்ட வந்த கப்பல் மோசமான வானிலை காரணமாக உருகுவேவை வந்தடைவதில் தாமதம் ஏற்பட்டது. கடைசி நேரத்தில் எகிப்து விலகியதால் 13 அணிகளை கொண்டு தொடர் நடத்தப்பட்டது.

ஐரோப்பாவில் உள்ள ஏராளமான நாடுகளில் கால்பந்து அணிகள் இருந்த போதிலும், நீண்ட தூர பயணம் காரணமாக 4 அணிகளே கலந்து கொண்டன. உலகக் கோப்பையில் முதல் வெற்றியை பதிவு செய்தது பிரான்ஸ் அணிதான். அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் 4-1 என்ற கோல் கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தியது. பிரான்ஸ் வீரர் லூசியன் லாரன்ட் உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் முதல் கோலடித்தவர் என்ற பெருமையை பெற்றார்.

இந்த உலகக் கோப்பையில் கோன்ட் வெர்டி என்ற நீராவி கப்பல் பயணம் பிரசித்தி பெற்றதாக அமைந்தது. பிரான்ஸ் நாட்டில் இருந்து புறப்பட்ட இந்த கப்பலில் ருமேனியா, பெல்ஜியம், பிரேசில் மற்றும் பிரான்ஸ் அணிகள் சுமார் 15 நாட்கள் பயணம் செய்து போட்டி நடைபெற்ற உருகுவே தலைநகர் மான்டிவிடியோவை வந்தடைந்தனர். இந்தத் தொடரில் கடைசி கட்டத்தில் பங்கேற்க முடிவு செய்த யுகோஸ்லோவியா ஒருவழியாக படாதபாடுப்பட்டு உருகுவேவை வந்தடைந்தது.

அந்த அணியில் இடம் பெற்றிருந்த வீரர்களின் சராசரி வயது 22 ஆகவே இருந்த போதிலும் பயணக்களைப்பு அவர்களது ஆட்டத்திறனை பாதிக்கவில்லை. சிறப்பாக விளையாடிய அந்த அணி அரை இறுதிக்கு முன்னேறியது. இதனால் ஐரோப்பிய கண்டத்தில் இருந்து அரை இறுதியில் கால்பதித்த ஒரே அணி என்ற பெருமையை பெற்றது. ஆனால் அரை இறுதியில் யுகோஸ்லோவியா 1-6 என்ற கோல் கணக்கில் உருகுவேயிடம் வீழ்ந்தது. ஆனால் இந்த ஆட்டம் உருகுவேக்கு சாதகமாக இருக்கும் வகையில் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. மற்றொரு அரை இறுதியில் அர்ஜென்டினா 6-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை பந்தாடியது. இறுதிப் போட்டியில் பரமவைரிகளான அர்ஜென்டினா - உருகுவே மோதின.

1928 ஒலிம்பிக் போட்டியின் இறுதிச்சுற்றில் உருகுவே 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றிருந்ததால் இந்த ஆட்டம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. போட்டியை காண 93 ஆயிரம் ரசிகர்கள் குவிந்தனர். இறுதி ஆட்டத்தில் விளையாடப்படும் பந்தை யார் வழங்குவது என்பதில் உடன்பாடு ஏற்படாததைத் தொடர்ந்து முதல் பாதியில் அர்ஜென்டினா வழங்கிய பந்தும், 2-வது பாதியில் உருகுவே வழங்கிய பந்தும் பயன்படுத்தப்பட்டன. இந்த ஆட்டத்தில் உருகுவே 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று மகுடம் சூடியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x