Published : 16 May 2018 07:40 AM
Last Updated : 16 May 2018 07:40 AM

செய்தித்துளிகள்: பிசிசிஐ தலைவரானார் சஷாங்க் மனோகர்

பிசிசிஐ-யின் முன்னாள் தலைவரான சஷாங்க் மனோகர் 2-வது முறையாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ரஷ்யாவில் அடுத்த மாதம் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து தொடர்பான செய்திகளை சேகரிப்பதற்காக விசா கேட்டு விண்ணப்பித்திருந்த ஜெர்மனி பத்திரிகையாளர் ஹஜோ செப்பல்ட்டின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. ரஷ்ய நாட்டு ஊக்க மருந்து தடுப்பு சோதனைகளில் நிகழ்ந்த மோசடிகளை அவர் வெளிக்கொண்டு வந்ததே இதற்கு காரணம் என குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தற்போது ஹஜோவுக்கு விசா வழங்க ரஷ்யா சம்மதம் தெரிவித்துள்ளது.

அடுத்த 3 வருடங்களில் மகளிருக்கான ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரை நடத்த தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருதாக பிசிசிஐ நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவில் இருந்து விலகுவதாக முன்னாள் வீரர் மார்க் வாஹ் தெரிவித்துள்ளர். அதேவேளையில் இங்கிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான தொடர் வரை பதவியில் நீடிக்க அவர் முடிவு செய்துள்ளார். ஏறக்குறைய 4 வருடங்களாக தேர்வுக்குழுவில் இருக்கும் மார்க் வாஹ் ஒப்பந்த காலம் வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புரோ கபடி லீக் 5-வது சீசனில் பங்கேற்கும் புனேரி பல்தான் அணியின் புதிய பயிற்சியாளராக அசன் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரெஞ்சு ஓபன் டென்னிஸில் இருந்து பிரான்ஸ் வீரர் ஜோ வில்பிரைடு சோங்கா விலகியுள்ளார். தரவரிசையில் 37-வது இடத்தில் உள்ள அவர், இடது முழங்கால் மூட்டு பகுதியில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். இதில் இருந்து முழுவதுமாக குணமடையாததால் பிரெஞ்சு ஓபனில் இருந்து விலகியுள்ளார்.

கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் 9 மாத காலம் தடை பெற்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கேமரூன் பான்கிராப்ட் மேற்கு ஆஸ்திரேலிய கிளப் அணிக்காக விளையாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இத்தாலி கால் பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக 54 வயதான ராபர்ட்டோ மான்சினி நியமிக்கப்பட்டுள்ளார். உலகக் கோப்பையில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற இத்தாலி அணி அடுத்த மாதம் ரஷ்யாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறும் வாய்ப்பை கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் இழந்தது. இதையடுத்து பயிற்சியாளர் பதவியில் இருந்து வெஞ்சுரா விலகியிருந்தார். அதன் பின்னர் தற்போதுதான் இத்தாலிக்கு நிரந்தரமான தலைமை பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சூதாட்ட வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதால் கவுண்டி போட்டிகளில் விளையாட தனக்கு பிசிசிஐ அனுமதி அளிகக்கக் கோரி கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதற்கிடையே ஸ்ரீசாந்த் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்து போலீஸார் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் ஸ்ரீசாந்த்தின் மனுவை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், அவர் மீது டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை ஜூலை மாதத்துக்குள் முடிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x