Published : 03 May 2018 05:42 PM
Last Updated : 03 May 2018 05:42 PM

மே தினம்: தோனி கொடுத்த இன்ப அதிர்ச்சியால் தொழிலாளர்கள் நெகிழ்ச்சி

தொழிலாளர்கள் தினமான மே1-ம் தேதி அன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, மைதானத்தை பராமரிக்கும் தொழிலாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார்.

11-வது ஐபிஎல் சீசன் போட்டிகள் நடந்து வருகின்றன. சூதாட்டச் சர்ச்சையில் சிக்கி 2 ஆண்டுகள் தடைக்குபின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்று விளையாடி வருகிறது. இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே அணி, 6 போட்டிகளில் வெற்றியும், 2போட்டிகளில் தோல்வியும் அடைந்து, 12 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இன்று கொல்கத்தாவில் நடக்கும் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் சிஎஸ்கே அணி மோதுகிறது.

சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம் வீரர்களின் உழைப்பு ஒருபுறம் இருந்தாலும், தோனியின் கேப்டன்ஷிப் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அணியின் இக்கட்டான தருணங்களில் இவரின் கூலான அணுகுமுறையும், அனல்பறக்கும் பேட்டிங்கும் வெற்றிகள் பலவற்றை குவிக்க உறுதுணையாக இருந்துள்ளது.

களத்தில் ஆக்ரோஷமான பேட்டிங்கையும், கூலான கேப்டன்ஷிப்பையும் வெளிப்படுத்தும் தோனி, தனி மனிதராகவும் சிலநேரங்களில் அனைவரையும் நெகிழ்ச்சி அடையவைப்பார்.

கடந்த 1-ந்தேதி சர்வதேச தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. அன்றைய நாளில் மைதானப் பராமரிப்பில் ஈடுபடும் ஊழியர்களைச் சந்தித்து அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட தோனி, அவர்களுடன் சில மணிநேரத்தை செலவிட்டுள்ளார்.

களத்தில் தொலைவில் மட்டுமே தோனியைச் சந்திக்கும் வாய்ப்பு பெற்ற களபராமரிப்பு ஊழியர்களுக்கு திடீரென தோனியை அருகில் சென்று அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. தொழிலாளர்களுடன் தோனி எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சிஎஸ்கே அணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு மே தின வாழ்த்துக் கூறியுள்ளது.

அதில் சூப்பரான நாள். கிரிக்கெட் போட்டியின் வளர்ச்சிக்கும், நலனுக்கும் செலவிடும் ஒவ்வொருவருக்கும் சர்வதேச தொழிலாளர் தின வாழ்த்துக்கள். குறிப்பாக சென்னை சேப்பாக்கம், புனே நகரில் மைதான பராமரிப்பு பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு மே தின வாழ்த்துக்கள். #விசில்போடு, #எல்லோவ் என்று பதிவிடப்பட்டுள்ளது.

இந்த புகைப்படங்களைப் பார்த்த தோனியின் ரசிகர்கள் அவரை புகழந்து வருகின்றனர்.  மனிதநேயம் மிக்க மனிதர்,  உண்மையான மனிதர், தொழிலாளர்களின் தோழர் என்றெல்லாம் அவருக்கு புகழாரம் சூட்டி அவரின் ரசிகர்கள் மகிழ்கின்றனர். ஏராளமானோர் இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x