Published : 29 Apr 2018 12:45 PM
Last Updated : 29 Apr 2018 12:45 PM

சிஎஸ்கேவுக்கு அடுத்த சிக்கல்: 2 வாரத்துக்கு ‘சாஹர் அவுட்’

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹர் தசைப்பிடிப்பு காரணமாக அடுத்த 2 வாரங்களுக்கு விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11-வது ஐபிஎல் சீசன் தொடங்கியதில் இருந்து 8 அணிகளிலும்வீரர்களுக்கு காயம் ஏற்படுவதும், விலகுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சுரேஷ் ரெய்னா, டூப்ளசிஸ், கேதார் ஜாதவ் ஆகியோர் காயத்தால் அவதிப்பட்டு தற்போதுதான் மீண்டு வந்துள்ளனர். இந்நிலையில், மீண்டும் ஒரு வீரர் காயத்தால் விழுந்துள்ளார்.

இந்நிலையில், மும்பையில் நேற்று நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாச்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தியது. இந்தப் போட்டியில் விளையாடும் போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹர் 3-வது ஓவரின் முதல்பந்தை வீசும்போது, காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனால் அவரால் தொடர்ந்து களத்தில் விளையாட முடியவில்லை, அவருக்கு பதிலாக மாற்றுவீரர் பீல்டிங் செய்தார்.

இது குறித்து அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறுகையில், ’’வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹருக்கு காலில் தசைபிடிப்பு காயம் ஏற்பட்டுள்ளது. இந்த காயம் குணமடைய ஏறக்குறைய 2 வாரங்கள் ஆகும். அதுவரை அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என அணியின் மருத்துவ ஆலோசகர் தெரிவித்துள்ளார். இது அணிக்கு சற்று பின்னடைவான விஷயம்தான். இருந்தபோதிலும் இதிலும் ஒரு ஆறுதலான தகவல் என்னவென்றால், தனது தந்தையின் மறைவுக்கு தென் ஆப்பிரிக்கா சென்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி அங்கிருந்து புறப்பட்டுவிட்டார். விரைவில் அணியில் வந்து இணைந்துகொள்வார். அவரின் வருகை சாஹரின் இடத்தை நிரப்பும் என நம்புகிறேன். மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளர் நிகிடி, அதிகமான வேகத்திலும், துல்லியமாகவும் பந்துவீசக்கூடியவர்’’ எனத் தெரிவித்தார்.

சாஹர் இதுவரை அனைத்துப் போட்டிகளிலும் தொடக்க ஓவர்களை சிறப்பாக வீசியுள்ளார். இதுவரை 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அதிகபட்சமாக சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக 15 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x