Published : 25 Apr 2018 03:22 PM
Last Updated : 25 Apr 2018 03:22 PM

தொடர் தோல்வி: ரன் எடுப்பதில் சொதப்பல்: ரோகித் சர்மாவை ‘கலாய்த்த ரசிகர்கள்’

 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி படுதோல்வி அடைந்தது. இதனால் வெறுப்படைந்த மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் கேப்டன் ரோகித் சர்மாவை ட்விட்டரில் கடுமையாக கிண்டல் செய்து வருகின்றனர்.

11-வது ஐபில் போட்டி சீசன் தொடங்கியதில் இருந்தே நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி படுமந்தமாக விளையாடி வருகிறது. திறமையான பேட்ஸ்மன்களான சூரியகுமார் யாதவ், இசான் கிஷான், ரோகித்சர்மா, ஹர்திக் பாண்டியா, குர்னல் பாண்டியா, கிரன்பொலார்ட் உள்ளிட்ட பல வீரர்கள் இருந்தும் பேட்டிங்கில் சோடை போனது.

மும்பையில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி 18.4 ஓவர்களுக்கு 118 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 119 ரன்களை இலக்காக வைத்து துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணி 18.5 ஓவர்களில் 85 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது.

அந்த அணியில் குருணால் பாண்டியா 24 ரன்கள், சூரிய குமார் யாதவ் 39 ரன்கள் ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்கத்தில் ரன்களைச் சேர்த்தனர். மற்ற அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்கத்தில் ரன் சேர்த்து வீணாக விக்கெட்டை இழந்தனர்.

அதிலும் கேப்டன் ரோகித் சர்மா 6 பந்துகளைச் சந்தித்து 2 ரன்களில் ஆட்டமிழந்தார். கடந்த 4 போட்டிகளிலும் இதேபோலவே சொற்ப ரன்களில் ரோகித் ஆட்டமிழந்து ரசிகர்களை வெறுப்பேற்றியுள்ளார். இதுவரை ரோகிர்சர்மா ஒரு போட்டியில் மட்டுமே சிறப்பாக விளையாடியுள்ளார். மற்ற போட்டிகளில் எல்லாம் 20 ரன்களைக் கூட தாண்டவில்லை என்று ரசிகர்கள் புலம்புகின்றனர்.

சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தில் 15 ரன்களும், சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 11 ரன்களும், டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 18 ரன்களும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டக்அவுட்டும், நேற்றைய ஆட்டத்தில் 2ரன்களும் சேர்த்து ரோகித் சர்மா மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளார்.

நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் பேட்டிங், பந்துவீச்சு நாளுக்கு நாள் மோசமாக இருப்பதை அவர்களின் ரசிகர்களை வெறுப்பேற்றி இருக்கிறது. புள்ளிப்பட்டியலில் 2 புள்ளிகளுடன் 7-ம் இடத்தில் மும்பை அணி உள்ளது.

இதனால், ஆத்திரமடைந்த அவரின் ரசிகர்கள் ட்விட்டர், பேஸ்புக்கில் ரோகித் சர்மாவை கடுமையாகச் சாடியுள்ளனர். சில ரசிகர்கள் ‘ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணி்யில் இருப்பது பாரமாகும். உடனடியாக அவர் கேப்டன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு செல்லலாம். 11பேர் கொண்ட அணியில் இருக்கத் தேவையில்லை’ என்று சிலர் தெரிவித்துள்ளனர்.

‘சிலர் ஓட்டை கண்ணாடி கிளாசில் தண்ணீர் ஊற்றுவதுபோல் படத்தை பதிவிட்டு. இப்படித்தான் ரோகித்சர்மாவின் உழைப்பு இருக்கிறது’ என்று கிண்டல் செய்துள்ளனர்.

இன்னும் சிலர் ‘ரோகித் சர்மா ஏன் மணீஷ் பாண்டேபோல் விளையாடுகிறீர்கள்’ என்று கேட்டுள்ளனர். சிலரோ, ‘சன்ரைசர்ஸ் அணி இந்த ஐபிஎல் சீசனில் மிகக்குறைந்த ஸ்கோர் செய்துள்ளது. அதை சவாலாக எடுத்துக்கொண்டு அதைக் காட்டிலும் குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்து சாதித்துவிட்டீர்கள்’ என்று தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x