Published : 21 Apr 2018 02:58 PM
Last Updated : 21 Apr 2018 02:58 PM
அன்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிராக தன் 6வது ஐபிஎல் சதத்தை எடுத்த கிறிஸ் கெய்ல் அதன் பிறகே தன் உணர்ச்சியமயத்தின் உச்சத்தில் இருந்து வருகிறார்.
தன் 2 வயது குழந்தைக்கு பிறந்தநாள் பரிசு அந்த இன்னிங்ஸ் என்றார். தனக்கு அழுத்தம் எதுவும் இல்லை என்றாலும் தான் யாருக்கும் எதுவும் நிரூபிக்கவும் இல்லை என்றும் கூறினாலும் ஏலத்தில் புறக்கணிப்பை அவரால் ஜீரணிக்க முடியவில்லை என்று தெரிகிறது.
“அணிக்கு நல்ல தொடக்கத்தைக் கொடுத்து அதன் மேல் ஒரு இலக்கைக் கட்டமைக்க வேண்டும் என்பதே எண்ணம். சதம் அடித்தது அதில் நிகழ்ந்த ஒரு சம்பவமே. அது எனக்கு பிடித்தும் இருக்கிறது. நான் ஏற்கெனவே கூறியது போல் பார்மில் இருக்கும் போது அதன் உத்வேகத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அணிக்குள் நாங்கள் 3 விஷயங்களைப் பார்க்கிறோம், சுதந்திரம், பொழுதுபோக்கு, ஒவ்வொருவரும் தங்களை வெளிப்படுத்திக் கொள்வது.
அன்று நான் ஓடவும் செய்தேன் (சிரிப்பு), அது பெரிய மைதானம், சில வேளைகளில் நாம் ஓடவும் வேண்டும், வாழ்க்கை முழுதும் நடந்து கொண்டிருக்க முடியாது.
புவனேஷ்வர் குமார் முக்கிய பவுலர், அவர் நன்றாகத் தொடங்கினார், எனவே அவர் ஓவர்களை எச்சரிக்கையுடன் கடக்க வேண்டும். அவர் தளர்வாக வீசினால் நான் அவர் மீது பாயலாம், ஆனால் அங்கு நிலைமை அப்படியில்லை.
ரஷீத் கான் ஐபிஎல் கிரிக்கெட்டில் மிக அபாரமாக வீசி வருகிறார். அதனால் அவர் மீது கொஞ்சம் அழுத்தம் வைக்க முற்பட்டேன். அதாவது யுனிவர்ஸ் பாஸ் இங்குதான் இருக்கிறார் என்பதை அவர் அறிய வேண்டும் என்று விரும்பினேன். யார் அன்று ‘இன்சார்ஜ்’ என்பதை பவுலர்கள் அறிய வேண்டும் என்று விரும்பினேன்.
மட்டையை குழந்தைபோல் தாலாட்டியது என் மகளுக்காக அன்று அவள் பிறந்த தினம். பிறந்த தினத்தில் இந்தியாவில் 2வது முறையாக இருக்கிறோம்.
நான் களத்தில் இருக்கும் போது ரசிகர்களுடன் உரையாட விரும்புபவன், கிறிஸ் கெய்ல் மிகவும் வெளிப்படையானவர் என்பதை அனைவரும் அறிய வேண்டும். மொத்தத்தில் எனக்கு கேளிக்கை பிடிக்கும். வாழ்க்கை என்பதே எனக்கு மகிழ்ச்சிதான், கொண்டாட்டம்தான். எந்த சக்தியும் என்னை இதிலிருந்து தடுக்க முடியாது. வாழ்க்கையை முழுதும் அனுபவிக்க விரும்புகிறேன்.
இவ்வாறு கூறினார் கிறிஸ் கெய்ல்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT