Published : 17 Apr 2018 08:12 AM
Last Updated : 17 Apr 2018 08:12 AM

முதல் வெற்றியை பதிவு செய்யுமா மும்பை அணி?- பெங்களூருவுடன் இன்று மோதல்

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதுகிறது.

அதிரடி வீரர்களுக்கு பஞ்சம் இல்லாத சூழ்நிலை இருக்கும் போதிலும் இந்த சீசனில் இரு அணிகளும் தொடக்கத்திலேயே தடுமாறி வருகின்றன. அதிலும் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி தொடர்ச்சியாக 3 ஆட்டங்களிலும் தோல்வி கண்டுள்ளது. இந்த சீசனில் வெற்றிக்காக ஏங்கி வரும் அந்த அணி சொந்த மண்ணில் இன்று முதல் வெற்றியை பெறுவதில் முனைப்பு காட்டக்கூடும்.

அதேவேளையில் முதல் ஆட்டத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக தோல்வியடைந்த போதிலும் அடுத்த ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தி மீண்டு வந்தது விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி. எனினும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 217 ரன்கள் இலக்கை துரத்திய போது 19 ரன்களில் தோல்வியை சந்தித்தது. பஞ்சாப் அணிக்கு எதிராக ஒரே ஓவரில் 3 விக்கெட்கள் வீழ்த்திய உமேஷ் யாதவ் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 ஓவர்களை வீசி 59 ரன்களை வாரி வழங்கினார்.

யுவேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் மட்டுமே சிக்கனமாக ரன்களை வழங்கினர். இதனால் வேகப் பந்து வீச்சு கூட்டணியில் பெங்களூரு அணி சில மாற்றங்களை மேற்கொள்ளக்கூடும். பேட்டிகில் விராட் கோலி பார்முக்கு திரும்பியிருப்பது அணிக்கு கூடுதல் பலத்தை சேர்க்கக்கூடும். முதல் இரு ஆட்டங்களிலும் மட்டையை சுழற்றத் தவறிய அவர், ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி 57 ரன்கள் சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடன் பிரண்டன் மெக்கலம், டி வில்லியர்ஸ் ஆகியோரும் மிரட்டக் காத்திருக்கின்றனர்.

முதல் இரு ஆட்டங்களிலும் பேட்டிங்கில் சிறந்த திறனை வெளிப்படுத்தத் தவறிய மும்பை அணி கடந்த ஆட்டத்தில் 194 ரன்கள் குவித்தது புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.

சூர்யகுமார் யாதவை தொடக்க வீரராக களமிறக்கியது நல்ல பலனை கொடுத்த போதிலும் சிறந்த பேட்ஸ்மேனான ரோஹித் சர்மா தொடர்ந்து தடுமாறி வருவது பின்னடைவை கொடுத்துள்ளது. அவரிடம் இருந்து இதுவரை பெரிய அளவிலான பங்களிப்பு வெளிப்படவில்லை. மேலும் ஹர்திக் பாண்டியா, கிருனல் பாண்டியா, கெய்ரன் பொலார்டு ஆகியோரும் ஆல் ரவுண்டர்களாக பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் இவர்கள் மூவரும் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சுழற்பந்து வீச்சாளரான மயங்க் மார்க்கண்டே இந்த சீசனில் அற்புதமாக பந்து வீசி வருகிறார்.

அதேவேளையில் உலகத்தரம் வாய்ந்த வேகப் பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தபடி செயல்படாததும் பின்னடைவாக கருதப்படுகிறது. அவர், மீண்டும் பார்முக்கு வரும் பட்சத்தில் தொடர்ச்சியாக 4-வது தோல்வியை சந்திப்பதில் இருந்து மும்பை அணி தன்னை பாதுகாத்துக் கொள்ளக்கூடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x