Last Updated : 13 Apr, 2018 07:57 PM

 

Published : 13 Apr 2018 07:57 PM
Last Updated : 13 Apr 2018 07:57 PM

பந்துவீச்சில் கதிகலக்கும் ‘சன்ரைசர்ஸ்க்கு’ பதிலடி கொடுக்குமா ‘தினேஷ் கார்த்திக் படை’

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை நடக்கும் ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டத்தில் பந்துவீச்சில் வலிமையாக இருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

சன்சைரர்ஸ் அணி தான் இதுவரைஆடிய 2 லீக் ஆட்டத்திலும் வெற்றி பெற்று முன்னணியில்இருக்கிறது. ஹைதராபாத்தில் நேற்ற நடந்த ஆட்டத்தில் கடைசி பந்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை விரட்டி தனது முத்திரையை பதித்தது. அதற்கு முக்கிய காரணம் வலுவான பந்துவீச்சு மூலம் மும்பை இந்தியன்ஸ்அணியை 147 ரன்களுக்கு சுருட்டியதாகும். ஆதலால், சன்ரைசர்ஸ் அணிக்கு அதனுடைய பந்துவீச்சு போட்டியில் முக்கியத் துருப்புச்சீட்டாக அமையும்.

அதேசமயம், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி தனது முதல் போட்டியில் பெங்களூரு அணியை அடித்து நொறுக்கி இருக்கிறது. ஆனால் சென்னையில் நடந்த 2-வது போட்டியில், ரஸல் அதிரடியாக அடித்து ஆடி 202 ரன்கள் ஸ்கோர் செய்தது. ஆனால், தோனி படையின் வலுவான பேட்டிங் வரிசையின் முன் கொல்கத்தா நைட்ரைடர்ஸின் போராட்டம் எடுபடவில்லை.

டி20 போட்டியில் 202ரன்கள் வலுவான ஸ்கோர் என்கிற போதிலும், எதிரணி வீரர்களின் ரன்குவிப்பை கட்டுப்படுத்தும் வகையில் கொல்கத்தாவிடம் திறன்மிக்க பந்துவீச்சு கடந்த ஆட்டத்தில் இல்லை என்றே கூறலாம்.

ஆனால், இந்த முறை மிட்சல் ஜான்சன், கமலேஷ் நாகர்கோட்டி,சிவம் மால்வி ஆகியோர் வாய்ப்பு அளிக்கப்படும் எனத் தெரிகிறது. அதிலும், மிட்சல் ஜான்சன், நாகர்கோட்டி வருகை கொல்கத்தாஅணியின் பந்துவீச்சை உயிரோட்டமாக்கும், பந்துவீச்சும் பலப்படும்.

மேலும் 19வயதுக்குட்பட்டோருக்கான அணியில் கலக்கிய சுப்மான் கில் கடந்த 2போட்டிகளாக வாய்ப்புகளின்றி இருக்கிறார், அவருக்கும் இந்தபோட்டியில் வாய்ப்பு அளிக்கப்படும் என்று கொல்கத்தா அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஹீத் ஸ்டீரீக் தெரிவித்துள்ளார்.

ஏனென்றால், சிஎஸ்கே அணிக்கு எதிரான கடைசி போட்டியில், கடைசி ஓவரை வீசிய வினய்குமார் சிக்கனமாகவும், துல்லியமாகவும் வீசிஇருந்தால் போட்டியின் முடிவு தலைகீழாக மாறி இருக்கும். ஆனால், ரன்களை பிராவோவுக்கு வாரிக்கொடுத்தது தோல்விக்கு முக்கியக்காரணமாக அமைந்தது. ஆதலால், வினய் குமாருக்கு இந்த போட்டியில் ‘கல்தா’ கொடுக்கப்படும் எனத் தெரிகிறது.

பேட்டிங்கைப் பொறுத்தவரை தொடக்க ஆட்டக்காரர் சுனில் நரேன் ‘வெடிகுண்டு’போல் இருக்கிறார். எந்த பந்தை சிக்சருக்கும், பவுண்டிருக்கும் செல்லப்போகிறது என்று பந்துவீச்சாளரை பதற்றப்பட வைக்கிறார். அவர் களத்தில் நிற்கும் வரை ரன்ரேட் ராக்கெட் வேகத்தில் உயர்கிறது. கிறிஸ் லின், தினேஷ் கார்த்திக், உத்தப்பா, குல்தீப் யாதவ் ஆகியோரின் வலுவான பேட்டிங் இருப்பது அணிக்கு பலம் சேர்க்கிறது. ஆதலால், இந்த போட்டியில் கொல்கத்தா அணி தங்களின் பந்துவீச்சை பலப்படுத்துவது அவசியமாகிறது.

அதேசமயம், சன்ரைசர்ஸ் அணியின் மிகப்பெரிய பலமே பந்துவீச்சாகும். இதுவரை தான் மோதிய 2 போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 2-ம் இடத்தில் இருக்கிறது. ஒருவேளை சிறந்த ரன்ரேட்டில் இருவெற்றிகளையும் பெற்றிருந்தால், சென்னை அணியை பின்னுக்குதள்ளி இருக்கும்.

சன்ரைசர்ஸ் அணியில் குறிப்பிடத்தகுந்த வீரராக ஆப்கானிஸ்தான் லெக்ஸ்பின்னர் ரஷித்கானை சொல்லலாம். இவரின் மாயஜால சுழற்பந்துவீச்சுக்கு எதிரணி வீரர்கள் எல்லாம் நடுங்குகிறார்கள். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்களில் 18 டாட் பந்துகளை வீசி, 13 ரன்கள், ஒருவிக்கெட்டை ரஷித்கான் கைப்பற்றியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் வேகப்பந்துவீச்சாளர் சந்தீப் சர்மா, ஸ்டான்லேக், புவனேஷ் குமார், சஹிப் அல் ஹசன், டி நடராஜன், சித்தார்த் கவுல் என பந்துவீச்சுக்கு பட்டாளமே இருக்கிறது. அதேபோல பேட்டிங்கில் கேன் வில்லியம்சன், ஷிகர் தவான், மணீஷ் பாண்டே, சகிப் அல் ஹசன், யூசுப் பதான், விர்திமான் சாஹா, தீபக் ஹூடா என பேட்டிங்கிலும் சவால் விடுக்கும் வீரர்கள் இருக்கிறார்கள்.

அதிலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியின் விழிம்பில் இருந்த அணியை ஸ்டான்லேக், தீபக் ஹூடா இருவரும் வெற்றிக்கு அழைத்துவந்தனர். இதுபோன்ற தன்னம்பிக்கை கொண்ட வீரர்கள் இருப்பது, தினேஷ் கார்த்திக் படைக்கு பெரிய குடைச்சலைக் கொடுக்கும். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் புனேஷ்குமார் விளையாடவில்லை, ஆனால், இந்தபோட்டியில் களமிறங்கும் பட்சத்தில் கொல்கத்தாவுக்கு மேலும் சவாலாக இருக்கும்.

ஒட்டுமொத்தத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான படைக்கு சன்ரைசர்ஸ் அணியின் பந்துவீச்சும், பேட்டிங்கும் சவாலாகவே இருக்கும். இந்த போட்டியும் ரசிகர்களை இருக்கையின் நுனியில்அமர வைக்கப்போவது உறுதியாகும்.

இந்தபோட்டி நாளை இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x