Published : 13 Apr 2018 09:02 AM
Last Updated : 13 Apr 2018 09:02 AM

‘டாட் பால்’ கிங் ரஷீத் கானின் நல்லுணர்வு: ஆட்ட நாயகன் விருதை மருத்துவமனையில் இருக்கும் நண்பரின் மகனுக்கு அர்ப்பணித்தார்

செல்லும் இடங்களிலெல்லாம் சிறப்பு என்பதற்கேற்ப எந்த டி20 லீகிலும் தன்னுடைய பவுலிங் திறமையை நிலைநாட்டி உலகப்புகழ் பெற்று வரும் ஆப்கான் லெக் ஸ்பின்னர் ரஷீத் கான் நேற்று மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக 18 டாட்பால்களை வீசியது புதிய ஐபிஎல் சாதனையாகும்.

நேற்று அவர் 4 ஒவர்களில் 13 ரன்களையே விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றினார், விக்கெட் முக்கியம் என்றாலும் மும்பை இந்தியன்ஸ் அதிரடி முயற்சிகளை முறியடித்துக் கட்டிப்போட்டார் ரஷீத் கான். அதுவும் கெய்ரம் பொலார்ட் போன்ற ஒரு கையில் சிக்சர் அடிக்கும் பேட்ஸ்மனை அவர் கட்டிப்போட்டது கண்கொள்ளாக்காட்சி, ஒரு பவுண்டரிதான் அவரை அடிக்க முடிந்தது பொலார்டினால் மீதி 5 பந்துகளும் டாட் பால்கள்.

சூரிய குமார் யாதவ், பொலார்ட் இருவருக்கும் ஒரு ஓவரை வீசியபோதும் 3 ரன்களையே கொடுத்தார். அவரது கூக்ளியை மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் மட்டுமல்ல வேறு வீரர்களும் இதுவரை சரியாகக் கணித்ததாகத் தெரியவில்லை.

இந்நிலையில் ஆட்ட நாயகன் விருதை நேற்று அவர் பெற்ற போது கூறியதாவது:

ரன் கொடுக்காத (டாட்பால்கள்) பந்துகள் குறைந்த ஓவர் கிரிக்கெட்டில் மிக முக்கியமானது. எனவே நான் டாட் பால்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன். குட்லெந்தில் பிட்ச் செய்து கலவையான சுழற்பந்துகளை வீசி வருகிறேன்.

பேட்ஸ்மென்களின் பலவீனத்தை எப்போதும் குறிவைப்பேன். லெக் ஸ்பின் கூக்ளி இரண்டையுமே நன்றாகத் திரும்புமாறு செய்கிறேன். எந்த ஒரு லீகில் ஆடினாலும் ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் எங்களுக்குப் பக்கபலமாக உள்ளனர். அவர்களுக்கும் எங்களுக்கும் விளையாட்டைத் தவிர எங்கள் நாட்டில் வேறு மகிழ்ச்சி ஏது. நான், முஜீப், நபி இங்கு அவர்களுக்காக மகிழ்ச்சி அளித்து வருகிறோம்.

இந்த ஆட்ட நாயகன் விருதை மருத்துவமனையில் இருக்கும் என் நண்பரின் மகனுக்கு அர்ப்பணிக்கிறேன்.

இவ்வாறு கூறினார் ரஷீத் கான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x