Published : 10 Apr 2018 03:57 PM
Last Updated : 10 Apr 2018 03:57 PM

தோனிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் திடீர் கட்டுப்பாடு

காவிரி மேலாண்மை வாரிய விவகாரம் வலுத்து வருவதை அடுத்து சிஎஸ்கே கேப்டன் மகேந்திரசிங் தோனிக்கு சிஎஸ்கே நிர்வாகம் திடீர் கட்டுப்பாடு விதித்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ், விசில் போடு, மஞ்சள் பனியன் அனைத்தையும் தாண்டி சென்னை கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் உச்சரிக்கப்படும் நேசிக்கப்படும் ஒரு வார்த்தை உண்டென்றால் அது தோனி என்ற வார்த்தை.

தோனி என்ற தனி மனிதர் இந்திய அணியின் கேப்டனாக இருந்த காலத்திலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனானார். இதனால் தமிழக ரசிகர்களின் செல்லப்பிள்ளையானார் தோனி. மற்ற நட்சத்திரங்களை தொலைவில் வைத்து பிரமித்துப் பார்த்த ரசிகர்கள் தோனியை மட்டும் தங்கள் குடும்பத்தில் ஒருவராக வைத்துப் பார்த்து ரசித்தனர்.

செல்வாக்கு மிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டபோது அணிக்கு தடை என்பதை விட இனி தோனி சென்னை அணியில் இல்லையா என்றே ரசிகர்கள் வருத்தப்பட்டனர். அதன் பின்னர் தோனி புனே அணியின் கேப்டனாக மாறினாலும் தோனி இருக்கும் அணிதான் சென்னை சூப்பர் கிங்ஸ் என்றே தமிழ் ரசிகர்கள் கொண்டாடினர்.

தோனி மீது ரசிகர்களுக்கு இருக்கும் அன்பு அளவிட முடியாதது. அதை தோனியும் பல முறை பேட்டியில் கூறியுள்ளார். தான் சென்னையின் செல்லப்பிள்ளை என்றே கூறியுள்ளார். சமீபத்தில் பேட்டி அளித்த நடிகர் சிம்புகூட தோனி தமிழக மக்களை நம்மைவிட நேசிப்பவர் அவர் காவிரி மேலாண்மை வாரிய விஷயத்தில் தகுந்த முடிவெடுத்து எப்படி முடியுமோ அப்படி எதிர்ப்பை காட்டவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தோனி சென்னை வரும்போதெல்லாம் சென்னையில் தனது பிரதான மோட்டார் சைக்கிளில் ஹெல்மட் அணிந்து சாதாரணமாக சுற்றிவருவார். அல்லது எங்காவது வெளியில் திடீர் விசிட் அடிப்பார். இந்த முறை காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தால் வீரர்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதால் நீங்கள் வழக்கம் போல் ஹெல்மட்டை மாட்டிக்கொண்டு சென்னையில் ஊர் சுற்றக்கூடாது, அல்லது வெளியில் நண்பர்களுடன் செல்லக்கூடாது என்று சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் கடுமையாக கட்டுப்பாட்டை விதித்துள்ளதாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x