Last Updated : 01 Apr, 2018 06:57 PM

 

Published : 01 Apr 2018 06:57 PM
Last Updated : 01 Apr 2018 06:57 PM

கடைசி பந்து சிக்ஸ் வெற்றிக்குப் பிறகே அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும்: தினேஷ் கார்த்திக்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக புதிய பொறுப்பேற்றுள்ள தினேஷ் கார்த்திக், தனக்கு அழுத்தம் உள்ளது என்றும் எனினும் அதனை சிறப்பாகக் கையாள முடியும் என்றும் நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.

கம்பீர் தலைமையின் கீழ் கொல்கத்தா அணி ஐபிஎல் டி20 கிரிக்கெட்டில் 2012, 2014-ல் சாம்பியன் பட்டம் வென்றது, மேலும் 2011, 2016, 2017-ம் ஆண்டுகளில் பிளே ஆஃப் சுற்றுவரை வந்தது.

இந்நிலையில் அணியின் புதிய சீருடை அறிமுக நிகழ்ச்சியில் கொல்கத்தாவில் தினேஷ் கார்த்திக் கூறியதாவது:

கேகேஆர் அணிக்கு கவுதம் கம்பீர் செய்தது பிரமிக்கத்தக்கது. அவர் ஒரு தரநிலையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். அணியின் தலைவராக அணி நிர்வாகம் கவுதம் கம்பீர் போலவே என்னிடமும் அதிகம் எதிர்பார்க்கும். ஆம் அழுத்தம் உண்டு. ஒரு கேப்டனாக அணி பிளே ஆஃப் வரை முன்னேற வேண்டுமென்று என்னிடம் எதிர்பார்ப்பு இருக்கிறது.

இப்போது இவ்வகை அழுத்தத்தை நான் கையாளும் நம்பிக்கையில்தான் இருக்கிறேன். வீரர்களிடமிருந்து சிறந்தவற்றை என்னால் வெளிக்கொண்டு வர முடியும்.

வங்கதேசத்துக்கு எதிரான முத்தரப்பு கிரிக்கெட் தொடர் இறுதிப்போட்டியில் சிக்ஸ் அடித்து வென்ற பிறகே நாட்கள் ஓடிவிட்டன, அதன் பிறகு எல்லாம் மாறிவிட்டன, ரசிகர்களும் அதிலிருந்து நகர்ந்து விட்டனர். நான் ஏற்கெனவே கூறியது போல் அது ஒரு அருமையான ஆட்டம். வங்கதேசத்துடன் ஆடும்போது அது இன்னொரு வகையான அழுத்தம், வென்றால் ஓகே வங்கதேசத்தை வென்று விட்டோம் என்று கூறுவார்கள் தோற்றால் வங்கதேசத்துடன் தோல்வியா என்ன நடக்கிறது என்பார்கள் என்று ஏற்கெனவே நான் கூறியிருக்கிறேன்.

அந்தப் போட்டியில் நல்ல தொடக்கம் கண்டோம், மிடிலில் கொஞ்சம் சரிவு, நான் இறங்கும்போது பவுண்டரிகள் அடிக்க வேண்டிய கட்டாயம். அந்தத் தொடர் நன்றாக அமைந்தது, ஆகவே இறுதிப்போட்டியில் வென்றிருக்காவிட்டால் ஏமாற்றமாகவே இருக்கும். அது ஒரு மகா உணர்வு.

இந்திய அணி போல் அல்லாமல் இங்கு நான் பல்வேறு நிலைகளில் இறங்குவேன். ஐபிஎல் என்பது சூழ்நிலைகளைச் சமாளிப்பதாகும். இன்னும் ஒருவாரம் இருக்கிறது, நான் என்னை வித்தியாசமாக நடத்திக் கொள்ள மாட்டேன். அனைவருமே இங்கு சிறந்தவற்றை அளிக்கப் போகிறார்கள், நான் ஒன்றும் வித்தியாசம் இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கு உண்டு.

என் மனைவி தீபிகா பல்லிக்கல்லிடமிருந்து நான் உறுதிப்பாடையும் கடின உழைப்பையும் கற்றுக் கொண்டேன். காமன் வெல்த் போட்டிகளுக்காக தீபிகா உண்மையில் கடினமாக உழைத்தார்.

இவ்வாறு கூறினார் தினேஷ் கார்த்திக்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x