Published : 22 Mar 2018 11:57 AM
Last Updated : 22 Mar 2018 11:57 AM
அம்பேத்கர் குறித்து சர்ச்சையாக ட்வீட் பதிவிட்டதற்காக இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜோத்பூர் மாவட்ட எஸ்.இ / எஸ்.டி சிறப்பு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி ஹர்திக் பாண்டியா அவரது ட்விட்டர் பக்கத்தில் எந்த அம்பேத்கர்? சட்டத்தையும், அரசியலையும் வகுத்தவரா... ?அல்லது இடஒதுக்கீடு என்னும் நோயை இந்த நாட்டில் பரப்பியவரா? என்று பதிவிட்டிருந்தார்.
இந்த ட்வீட்டுக்கு எதிர்ப்புகள் கிளம்பியதைத் தொடர்ந்து பாண்டியா அந்த ட்வீட்டை நீக்கினார்.
இந்த நிலையில் இது தொடர்பாக இரண்டு மாதங்களுக்குப் பின்னர் ஹர்திக் பாண்டியா மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
டி.ஆர். மேல்வால் என்பவர் ஹர்திக் பாண்டியாவின் ட்வீட் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக உள்ளது என்றும். ஹர்திக் பாண்டியாவின் இந்த ட்வீட் அரசியலைப்பைப் புறக்கணிப்பதாக உள்ளது என்று கூறி ஜோத்பூர் எஸ்.இ / எஸ்.டி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதுகுறித்து மேல்வால் கூறும்போது, 'நான் சமூக வலைத்தளத்தின் மூலம் கடந்த ஜனவரியில் பாண்டியாவின் ட்வீட்டை படித்தேன். அவரது ட்வீட் அம்பேத்கரை அவமதிப்பதுடன், வெறுப்பை ஏற்படுத்தி பிளவு ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதற்காக பாண்டியாவுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்” என்றார்.
இந்த நிலையில் இம்மனுவைச் செவ்வாய்க்கிழமை விசாரித்த ஜோத்பூர் மாவட்ட நீதிமன்றம் ஹர்திக் பாண்டியா மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT