Published : 13 Mar 2018 08:53 PM
Last Updated : 13 Mar 2018 08:53 PM
ஐசிசி டெஸ்ட் பவுலர்கள் தரவரிசையில் 900 புள்ளிகளைக் கடந்த தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ரபாடா முதலிடம் பிடித்தார். இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் 2 இடங்கள் முன்னேறி 4-ம் இடத்தில் இருக்கிறார்.
போர்ட் எலிசபெத் மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் 150 ரன்களுக்கு 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதில் முக்கிய பங்காற்றியதால் ஆட்ட நாயகன் விருது பெற்றார் ரபாடா.
900 புள்ளிகளைக் கடந்த 23-வது பவுலரானார் ரபாடா. தென் ஆப்பிரிக்காவைப் பொறுத்தவரை பிலாண்டர் (912), ஷான் போலக் (909) டேல் ஸ்ட்யென் (909) ஆகியோருக்குப் பிறகு 4வது தென் ஆப்பிரிக்க பவுலராக ரபாடா 900 புள்ளிகளைக் கடந்துள்ளார்.
ஜோஷ் ஹேசில்வுட் 4ம் இடத்திலிருந்து 5ம் இடம் செல்ல அஸ்வின் 2 இடங்கள் முன்னேறி 4ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலிய இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 5ம் இடத்திலிருந்து 9ம் இடத்துக்கு பின்னடைந்தார். ரவீந்திர ஜடேஜா 3-ம் இடத்தில் நீடிக்கிறார்.
பேட்டிங் தரவரிசையில் ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்தில் நீடிக்கிறார், இந்திய கேப்டன் விராட் கோலி 2ம் இடத்தில் நீடிக்கிறார். புஜாரா 6-ம் இடத்தில் இருக்கிறார்.
ஏ.பி.டிவில்லியர்ஸ் 126 ரன்கள் விளாசியதையடுத்து 5 இடங்கள் முன்னேறி டாப் 10க்குள் பிரவேசித்து 7ம் இடத்தில் உள்ளார்.
ஹஷிம் ஆம்லா 9ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார், லுங்கி இங்கிடி 12 இடங்கள் முன்னேறி 37வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
உஸ்மான் கவாஜா 5 இடங்கள் முன்னேறி 16-ம் இடத்திற்குச் சென்றுள்ளார்.
இங்கிலாந்துக்கும் நியூஸிலாந்துக்கும் இடையே டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளதால் இங்கிலாந்து தொடரை வென்றால் 4-ம் இடத்துக்கு முன்னேறும். நியூஸிலாந்து தொடரை வென்றால் ஆஸ்திரேலியாவை பின்னுக்குத் தள்ளி நியூஸிலாந்து 3ம் இடம் செல்லும், அதாவது தென் ஆப்பிரிக்காவில் ஆஸ்திரேலியா 3-1 என்று தோற்று, நியூஸி, இங்கிலாந்தை வீழ்த்தினால் நியூஸிலாந்து 3ம் இடம் செல்லும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT