Published : 12 Feb 2018 05:09 PM
Last Updated : 12 Feb 2018 05:09 PM
வாண்டரர்சில் நடைபெற்ற 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றதற்கு டேவிட் மில்லர் பவுல்டு ஆன சாஹலின் நோ-பால்தான் காரணம் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சாஹல் நோ-பாலில் மில்லர் பவுல்டு ஆன போது அவரது தனிப்பட்ட ஸ்கோர் 7 ரன்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
“இதுதான் அந்த ஆட்டத்தின் திருப்பு முனை என்று நான் கருதுகிறேன். ஏ.பி.டிவில்லியர்சும் ஆட்டமிழந்து விட்டார், மில்லர் அப்போது சாஹல் பந்துகளைக் கணிப்பதில் திணறிக் கொண்டிருந்தார். இந்திய அணி அப்போது முழுக்கட்டுப்பாட்டில் இருந்தது.
எனவே அந்த இடத்தில் கொஞ்சம்... சிறிதளவு தொழில் நேர்த்தியின்மை வெளிப்பட்டது, 3-0 என்று முன்னிலை பெற்ற பிறகு இந்திய அணி கொஞ்சம் ‘ரிலாக்ஸ்’ ஆகிவிட்டனரோ என்று தோன்றுகிறது. தென் ஆப்பிரிக்கா இதனை தங்களுக்கு முழு சாதகமாக்கிக் கொண்டது. அதன் பிறகு அற்புதமாக ஆடினர். கிளாஸன் உண்மையில் தனிவிசேஷமான ஆட்டத்தை ஆடினார். இறுதியில் பெலுக்வயோ வந்து சாத்தி எடுத்தார்.
நவீன கிரிக்கெட்டில் தொழில் நுட்ப உதவி மலிந்துள்ள காலக்கட்டத்தில் ஒருவரும் நோ-பால் வீசக்கூடாது என்றே நான் உள்ளபடியே கருதுகிறேன். வேகப்பந்து வீச்சாளர்கள் 50 ஓவர் கிரிக்கெட்டில் நோ-பால் வீசுவதை புரிந்து கொள்ள முடிகிறது, அவர்கள் கூட ஃப்ரீ ஹிட் இருக்கும் போது நோ-பால் வீசுவதைக் கூடிய மட்டும் தவிர்க்க வேண்டும், ஸ்பின்னர்கள் நோ-பால்கள் வீசக் கூடாது. தொழில் நுட்ப உதவியுடன் பவுலர்கள் நோ-பால் வீசாமல் தற்காத்துக் கொள்ள வேண்டும்” என்றார் சுனில் கவாஸ்கர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT