Published : 23 Jan 2018 10:26 AM
Last Updated : 23 Jan 2018 10:26 AM

செய்தித்துளிகள்: லண்டனுக்கு சென்ற உலகக் கோப்பை டிராபி!

சென்னையில் நடைபெற்று வரும் மெக்பெரன் கோப்பைக்கான தேசிய கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை எப்சி பி - பெங்களூரு அணிகள் மோதின. இதில் பெங்களூரு அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் ஜெரின் 2 கோல்களும், தவா ஒரு கோலும் அடித்தனர்.

இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் ஜகார்த்தா நகரில் இன்று தொடங்குகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, இந்தோனேஷியாவின் ஹன்னா ரமாதினியுடன் மோதுகிறார். ஆடவர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், மலேசியாவின் ஜூல்பட்லி ஜூல்கிஃப்லியை சந்திக்கிறார்.

சையத் முஷ்டாக் அலி டி 20 தொடரில் பெங்கால் அணிக்கு எதிரான ஆட்டத்தில் உத்தரபிரதேச அணி கேப்டன் சுரேஷ் ரெய்னா 49 பந்துகளில் சதம் விளாசினார். ஒட்டுமொத்தமாக அவர் 59 பந்துகளில், 13 பவுண்டரிகள், 7 சிக்சர்களுடன் 126 ரன்கள் விளாசி நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். அவரது அதிரடியால் உத்தரபிரதேச அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 235 ரன்கள் குவித்தது. 236 ரன்கள் இலக்குடன் பேட் செய்த பெங்கால் அணி 16.1 ஓவர்களில் 160 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியடைந்தது.

இங்கிலாந்துக்கு எதிராக நேற்று முன்தினம் நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், தனது வாயின் ஓரத்திலிருந்து எச்சிலை எடுத்து பந்தில் தடவினார். இதனால் அவர் பந்தை சேதப்படுத்தினாரா என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் இதனை ஸ்மித் மறுத்துள்ளார். அவர் கூறும்போது, “பந்தை பிரகாசமாக்க, தான் வழக்கமாக கையாளும் உத்தி தான். என் உதட்டில் எந்தத் தைலமும் இல்லை. அது எச்சில் மட்டுமே” என்றார்.

உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் ஜூன் 14-ம் தேதி ரஷ்யாவில் தொடங்க உள்ள நிலையில் இந்தத் தொடரில் பட்டம் வெல்லும் அணிக்கு வழங்கப்பட உள்ள சாம்பியன் கோப்பை உலகின் பல்வேறு நாடுகளுக்கு பயணிக்க உள்ளது. முதல் கட்டமாக லண்டனுக்கு நேற்று டிராபி கொண்டு செல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து வரும் 24-ம் தேதி இலங்கையின் கொழும்பு நகருக்கு டிராபி பயணமாகிறது.

ஆஸ்திரேலியாவில் வரும் பிப்ரவரி 3-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி 20 கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளையில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெற்று வரும் 68-வது தேசிய கூடைப்பந்து போட்டியில் நேற்று காலை மகளிர் பிரிவில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் தமிழக அணி 84-50 என்ற புள்ளி கணக்கில் மேற்கு வங்கத்தை வீழ்த்தியது. அதேவேளையில் மாலையில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழக அணி 64-96 என்ற கணக்கில் இந்தியன் ரயில்வே அணியிடம் தோல்வியடைந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x