Published : 27 Dec 2017 10:55 AM
Last Updated : 27 Dec 2017 10:55 AM

தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரை இந்தியா வெல்லும்: வெங்கடேஷ் பிரசாத் கருத்து

தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரை இந்தியா வெல்லும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் கூறினார்.

இதுதொடர்பாக நேற்று அவர் கூறும்போது, “நீண்ட நாட்கள் கழித்து தென்னாப்பிரிக்காவுக்கு டெஸ்ட் விளையாட இந்தியா செல்கிறது. இந்திய அணியில் 5 ஸ்பெஷலிஸ்ட் பவுலர்கள் இடம்பெற்றுள்ளனர். இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், புவனேஸ்வர்குமார், முகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளது இந்திய அணிக்கு கூடுதல் பலம். இதில் மிகவும் அனுபவம் உள்ள பவுலராக இருப்பவர் இஷாந்த் சர்மா.

அவர்தான் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை வழிநடத்தவேண்டும். இதுவரை 79 டெஸ்ட் போட்டிகளி்ல விளையாடியுள்ள இஷாந்த் சர்மா 226 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகிறார்.

இந்த முறை தென்னாப்பிரிக்காவில் அவர் சாதிக்கவேண்டும். அதற்கான அத்தனை திறமைகளும் அவரிடம் உள்ளன. கபில்தேவ், ஜாகீர்கான், ஸ்ரீநாத் போல அவரும் சிறப்பான பவுலராக மாறவேண்டும். தென்னாப்பிரிக்காவுக்குச் செல்லும் இந்திய அணியில் இளைஞர்களும், அனுபவம் மிக்க வீரர்களும் உள்ளனர். அங்கு தொடரை இந்தியா வெல்லும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

ஸ்டெயின், மோர்க்கெல் குறித்து இந்திய பேட்ஸ்மேன்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. அவர்கள் காயமடைந்து தற்போதுதான் அணிக்குத் திரும்பியுள்ளனர்.

ஆனால் தென்னாப்பிரிக்க வீரர் ரபாடா, மிகவும் அபாயகரமான பந்துவீச்சாளர். அவரிடம் நமது பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

ஒவ்வொரு முறை இந்தியா தென்னாப்பிரிக்காவுக்குச் செல்லும்போது அங்கு தொடரை, இந்தியா வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருக்கும். இந்த முறையும் அந்த எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு எழுந்துள்ளதில் தவறில்லை” என்றார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x