Published : 13 Dec 2017 11:30 AM
Last Updated : 13 Dec 2017 11:30 AM

வாழ்த்து மழையில் கோலி -அனுஷ்கா

புதுமணத் தம்பதியான விராட் கோலி, அனுஷ்கா சர்மாவுக்கு சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவின் திருமணம், நேற்று முன்தினம் இத்தாலியின் மிலன் நகர் அருகே உள்ள டஸ்கனி பகுதியிலுள்ள பாரம்பரியமிக்க ரிசார்ட் ஒன்றில் நடைபெற்றது. பஞ்சாபி முறைப்படி நடைபெற்ற திருமணத்தில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

விராட் கோலி-அனுஷ்காவின் திருமண வரவேற்பு மும்பை மற்றும் டெல்லியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 21-ம் தேதி டெல்லியில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியில் உறவினர்களும் அதைத் தொடர்ந்து 26-ம் தேதி மும்பையில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்களும் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில் புதுமணத் தம்பதிக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.

சச்சின்: தம்பதிகளுக்கு திருமண வாழ்த்துகள். நீங்கள் இருவரும் அற்புதமாக இருக்கிறீர்கள்.

பிசிசிஐ: தம்பதிக்கு உளம்கனிந்த வாழ்த்துகள். திருமண வாழ்க்கை சிறக்கட்டும்.

ஷிகர் தவண்: அன்பு கொண்ட ஜோடிக்கு வாழ்த்துகள். கடவுள் ஆசீர்வதிக்கட்டும்.

புஜாரா: வாழ்க்கையில் அனைத்து ஆசீர்வாதங்களையும், மகிழ்ச்சியையும் பெற வாழ்த்துகிறேன்.

ஷோயிப் அக்தர்: வாழ்க்கையில் புதிய இன்னிங்ஸை மேற்கொள்ளும் ஜோடிக்கு வாழ்த்துகள்.

உமேஷ் யாதவ்: அற்புதமான ஒரு வாழ்க்கை உங்கள் முன்னால் இருக்கிறது. மகிழ்ச்சி பொங்க கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்.

ஷாகித் அப்ரிடி: கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார். திருமண பரிசாக மகிழ்ச்சியை வழங்குவார்.

சானியா மிர்சா: நீங்கள் அன்பாக இருப்பதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. உலகில் உள்ள அனைத்து சந்தோஷத்தையும் பெற வாழ்த்துகள்.

விராட் கோலி, அனுஷ்கா சர்மாவின் திருமணம் இந்து முறைப்படி நடைபெற்றுள்ளது. தம்பதிகளுக்கான ஆடையை பிரபல வடிவமைப்பாளரான சபாச்சி முகர்ஜி தயார் செய்திருந்தார்.

உலகில் மிக விலை உயர்ந்த செலவில் விடுமுறை நாட்களை செலவழிக்கும் போர்கோ ஃபினோசிச்சியோ ரிசார்ட்டில் விராட் கோலியின் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்த ரிசார்ட் பிபியானோ என்ற கிராமத்தில் உள்ளது. இங்கு 100-க்கும் குறைவான மக்களே வசித்து வருகின்றனர். இந்த கிராமம் இத்தாலியின் டஸ்கனி மண்டலத்தில் அமைந்துள்ளது.

திருமண வரவேற்பு நிகழ்ச்சி முடிவடைந்ததும் விராட் கோலியுடன், அனுஷ்கா சர்மா தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு செல்கிறார். புத்தாண்டை அங்கு கொண்டாடிய பின்னர் ஜனவரி முதல் வாரத்தில் அனுஷ்கா சர்மா இந்தியா திரும்புகிறார். அதைத் தொடர்ந்து மும்பையில் ஷாருக்கானின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். அதேவேளையில் விராட் கோலி, தென் ஆப்பிரிக்க தொடரில் கலந்து கொண்டு விளையாட உள்ளார்.

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் 2 மாதங்கள் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 6 ஒருநாள் போட்டி, 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே புதுமணத் தம்பதி மும்பை வோர்லி நகரில் உள்ள புதிய வீட்டில் குடியேறவும் முடிவு செய்துள்ளது. - ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x