Last Updated : 25 Oct, 2017 02:48 PM

 

Published : 25 Oct 2017 02:48 PM
Last Updated : 25 Oct 2017 02:48 PM

பிட்ச் மோசடி சர்ச்சையில் சிக்கிய மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க பிட்ச் தயாரிப்பாளர் நீக்கம்

 

நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது போட்டி நடைபெறும் புனே பிட்ச்சை குறிப்பிட்ட இரு பவுலர்களுக்குச் சாதகமாக தயாரிக்கப்போவதாக தொலைக்காட்சி ஒன்றின் ‘ஸ்டிங் ஆபரேஷனில்’ பேட்டி கொடுத்து சிக்கினார் மகாரஷ்டிர கிரிக்கெட் சங்கத்தின் பிட்ச் தயாரிப்பாளர் பாண்டுரங் சல்கோங்கர்.

இதனையடுத்து பிசிசிஐ இவரை இடைநீக்கம் செய்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த சர்ச்சை 2-வது போட்டி தொடக்கத்தில் எந்த வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை, குறித்த நேரத்தில் போட்டிதொடங்கியது.

இந்தியா டுடே டிவி நடத்திய இந்த ரகசிய புலனாய்வு நடவடிக்கையில் இரண்டு குறிப்பிட்ட பவுலர்களுக்குச் சாதகமாக பிட்சைத் தயாரிக்கமுடியும் என்று கூறினார். ஆனால் பவுலர்கள் பெயர்களை வெளியிடவில்லை.

மேலும் புக்கிகள் போல் நடித்த தொலைக்காட்சி நிருபர்களிடம் பிட்ச் பற்றிய தகவலை அளித்துள்ளார் சல்கோங்கர். இது ஐசிசி ஊழல் எதிர்ப்பு விதிமுறைகளுக்கு முற்றிலும் எதிரான ஒன்று.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் போதும் இதே பாண்டுரங் சல்கோங்கர் சர்ச்சையில் சிக்கினார், ஐசிசி இவர் உருவாக்கிய பிட்சை மோசமானது என்று தரப்படுத்தியது. அப்போது பிட்சை மோசமானது என்று கூறியவர் ஐசிசி ஆட்ட நடுவர் கிறிஸ் பிராட்.

இது குறித்து பிசிசிஐ (பொறுப்பு) தலைவர் சி.கே.கன்னா கூறும்போது, “சல்கோங்கர் நீக்கப்பட்டுள்ளார், விசாரணை அறிக்கை வெளியாகும் வரை அவர் எந்த ஸ்டேடியத்திலும் நுழைய அனுமதி இல்லை” என்றார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும் என்று ஐசிசியும் உறுதி செய்துள்ளது. “புனேயில் இந்த சர்ச்சை குறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம். இதன் பின்னணியில் உள்ள உண்மைகளை விசாரித்து வருகிறோம் அதுவரை இது குறித்த எந்த தகவலையும் வெளியிட முடியாது” என்று ஐசிசி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x