Last Updated : 25 Oct, 2017 10:15 AM

 

Published : 25 Oct 2017 10:15 AM
Last Updated : 25 Oct 2017 10:15 AM

யு 17 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கால்பதிப்பது யார்?- பிரேசில் - இங்கிலாந்து அணிகள் கொல்கத்தாவில் இன்று பலப்பரீட்சை

பியா யு 17 உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று அரை இறுதி ஆட்டங்கள் நடைபெறுகிறது. இதில் மாலை 5 மணிக்கு கொல்கத்தாவில் நடைபெறும் முதல் அரை இறுதி ஆட்டத்தில் பிரேசில் - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

பிரேசில் அணி தனது கால் இறுதியில் 1-0 என பின்தங்கிய நிலையில் விவெர்சன், பவுலின்ஹோ ஆகியோரது அசத்தல் ஆட்டத்தால் 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியிருந்தது. அதேவேளையில் லீக் சுற்றில் ‘எப்’ பிரிவில் இடம் பெற்றிருந்த இங்கிலாந்து அனைத்து ஆட்டங்களிலும் வெற்றியை வசப்படுத்தியிருந்தது. 3 லீக் ஆட்டங்களிலும் அந்த அணி 11 கோல்கள் அடித்திருந்தது. வெறும் 2 கோல்கள் மட்டுமே வாங்கியிருந்தது.

நாக் அவுட் சுற்றில் இங்கிலாந்து அணி, ஜப்பானுக்கு எதிராக நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களில் கோல் அடிக்கத் தவறினாலும், பெனால்டி ஷூட் அவுட்டில் 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து கால் இறுதியில் 4-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவையும் இங்கிலாந்து பந்தாடியிருந்தது. இந்த ஆட்டத்தில் ஹாட்ரிக் கோல் அடித்த ரியான் ப்ரூஸ்டர் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

யு 17 உலகக் கோப்பையில் முதன்முறையாக அரை இறுதியை சந்திக்கும் இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஜேடன் சான்சோ இல்லாமல் களமிறங்குகிறது. தாக்குதல் ஆட்டத்தை தொடுக்கும் நடுகள வீரரான அவர், லீக் சுற்றுடன் வெளியேறினார். ஜெர்மனியில் உள்ள கிளப் அணிக்காக விளையாடுவதற்கு தேசிய அணியில் இருந்து விலகி உள்ளார். ஏனினும் பில் போடன், ஹட்சன், ஜார்ஜ் மெக்கெரான் உள்ளிட்ட நம்பிக்கை அளிக்கும் வீரர்கள் இருப்பதால் இங்கிலாந்து அணியின் திறன் பாதிக்கப்படாது என்றே கருதப்படுகிறது. கடந்த ஆட்டத்தில் சான்சோவுக்கு பதிலாக ஏஞ்சல் கோம்ஸ் களமிறங்கினார். அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படக்கூடும்.

யு 17 உலகக் கோப்பையில் 3 முறை சாம்பியனான பிரேசில் அணி, 7-வது முறையாக அரை இறுதி ஆட்டத்தை சந்திக்கிறது. நட்சத்திர வீரர்களான பவுலின்ஹோ, ஆலன், லிங்கன் ஆகியோர் எந்த நொடியிலும் ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறன் படைத்தவர்களாக உள்ளனர். மேலும் கோல்கீப்பர் கேப்ரியல் பிரேசோ அணிக்கு பெரிதும் பலம் சேர்ப்பவராக உள்ளார். ஜெர்மனிக்கு எதிரான கால் இறுதியில் தொடர்ச்சியான பெனால்டி வாய்ப்புகளில் இருந்து அணியை காப்பாற்றினார். இதனால் இவரின் தடுப்பை மீறி இங்கிலாந்து வீரர்கள் கோல் அடிக்க கடும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.

இரவு 8 மணிக்கு மும்பையில் நடைபெறும் 2-வது அரை இறுதியில் ஸ்பெயின் - மாலி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x