Last Updated : 11 Sep, 2017 10:14 AM

 

Published : 11 Sep 2017 10:14 AM
Last Updated : 11 Sep 2017 10:14 AM

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகள்: இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு; அஸ்வின், ஜடேஜாவுக்கு ஓய்வு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஆடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டித் தொடர் வரும் 17-ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டி சென்னையில் நடக்கவுள்ளது. இந்நிலையில் முதல் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஆடும் 16 வீரர்களைக் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரை 5-0 என்ற கணக்கில் வென்றதால் அதில் ஆடிய இந்திய அணியில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்படவில்லை. வேகப்பந்து வீச்சாளராக இருந்த ஷர்துல் தாக்குர் மட்டும் நீக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பதில் கடந்த ஒருநாள் போட்டித் தொடரில் ஆடாமல் இருந்த வேகப்பந்து வீச்சாளர்களான மொகமது ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர். மேலும் இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களான ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதில் அஸ்வின் தற்போது கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் ஆடி வருகிறார்.

சுழற்சி முறை

அணியின் தேர்வு குறித்து நிருபர்களிடம் பேசிய தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், “இலங்கைக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்தது. குறிப்பாக இளம் வீரர்களான அக்சர் படேல், யுவேந்திர சாஹல் ஆகியோர் சிறப்பான முறையில் பந்துவீசினர். அதனால் அவர் களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்க முடிவெடுத்தோம். மேலும் தற்போது கடைபிடித்து வரும் சுழற்சி முறையின் அடிப் படையில் ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் ஆகியோருக்கு ஓய்வு கொடுத்துள்ளோம்” என்றார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 3 போட்டிகளில் ஆடும் இந்திய அணி வருமாறு:

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவண், லோகேஷ் ராகுல், மணிஷ் பாண்டே, கேதார் ஜாதவ், அஜிங்க்ய ரஹானே, மகேந்திர சிங் தோனி, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ், மொகமது ஷமி.

ஸ்டீவன் ஸ்மித் கருத்து

முதல் ஒருநாள் போட்டியில் ஆடும் ஆஸ்திரேலிய வீரர்கள் அனைவரும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர். பயிற்சிக்கு பிறகு ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் நிருபர்களிடம் கூறியதாவது:

இந்திய அணி சமீபகாலமாக ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக ஆடி வருகிறது. சுழற்பந்து வீச்சில் அது வலுவாக உள்ளது. சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர். அவர்களுக்கு எதிரான வியூகங்களை வகுத்து வருகிறோம். அதே நேரத்தில் ஒருநாள் போட்டியில் சுழற்பந்து வீச்சின் தாக்கம் எந்த அளவு இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த தொடர் சவால் நிறைந்ததாக இருக்கும். விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். எங்கள் பந்துவீச்சாளர்கள் அவரைக் கட்டுப்படுத்தி வைப்பதைப் பொறுத்துதான் ஆஸ்திரேலிய அணியின் வெற்றி இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x