Published : 24 Aug 2017 10:33 AM
Last Updated : 24 Aug 2017 10:33 AM

டெஸ்ட் உட்பட அனைத்து கிரிக்கெட்டிலும் ஆடத் தயார்: ஏ.பி.டிவில்லியர்ஸ் உற்சாக அறிவிப்பு

டெஸ்ட், ஒருநாள், டி20 அனைத்து வடிவங்களிலும் ஆடத் தயார் என்று ‘360 டிகிரி பேட்ஸ்மென்’ என்று அழைக்கப்படும் ஏ.பி.டிவில்லியர்ஸ் உற்சாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதற்காக ஒருநாள் போட்டி தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பொறுப்பை உதறினார் ஏ.பி.டிவில்லியர்ஸ்.

நேற்று ஒரு பெரிய அறிவிப்பு வரும் என்றார், டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் ரசிகர்களின் எண்ணத்திற்கேற்ப டிவில்லியர்ஸ் அனைத்து வடிவங்களுக்கும் தான் தேர்வுக்குத் தயார் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே புத்துணர்வு ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக அவர் முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

கடந்த 12 மாதங்களில் நிறைய கூறியாகிவிட்டது. எனவே என் நிலைப்பாடு என்ன என்பதைத் தெளிவுபடுத்த இது சரியான தருணம் என்று முடிவெடுத்தேன். கடந்த ஓராண்டில் நான் எனக்கான கடமைகளை ஒழுங்குபடுத்த வேண்டியிருந்தது. நான் உடல் மன ரீதியாக சோர்வடைந்திருந்தேன். 2004 முதல் அனைத்து வடிவங்களிலும் தொடர்ந்து ஆடியது என் உடல், மன நிலையில் சோர்வை ஏற்படுத்தியது.

தென் ஆப்பிரிக்க வாரியத்துடன் சேர்ந்து என்னுடைய கிரிக்கெட் வாழ்வை தொடர்ந்து தக்கவைப்பதற்கான பயணத்திட்ட மாற்று வடிவத்திற்காக வேலை செய்து வந்தோம், ஆனால் இது நான் ஏதோ கிரிக்கெட்டை விடவும் நாட்டை விடவும் என்னை முன்னிறுத்துவதாகப் பேசப்பட்டது. ஏம் அணியை விடவும் எனக்கு நான் முக்கியத்துவம் அளித்துக் கொள்வதாகவும் கூறப்பட்டது. இது உண்மையல்ல, எப்போதும் இது உண்மையாகவும் இருந்ததல்ல. தென் ஆப்பிரிக்காவுக்கு ஆடுவதுதான் என் வாழ்க்கையின் மிக முக்கியத்துவமான காலம் என்றே கருதி வந்துள்ளேன்.

இப்போது அடுத்தக் கட்டத்தை யோசிக்கும் போது டுபிளேசிஸ் டி20, டெஸ்ட் அணிகளின் தனித்துவமான கேப்டனாகத் திகழ்கிறார். அதனால் ஒருநாள் போட்டி அணி கேப்டன்சி பதவியை நான் விட்டு விடுவதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்துடன் பேசினேன்.

கடந்த 6 ஆண்டுகளாக அணியை வழிநடத்தியது பெருமையளிக்கிறது யார் ஒருநாள் கேப்டனாக இருந்தாலும் எனது முழு பங்களிப்பும் ஆதரவும் உண்டு.

இந்த இடைவெளி எடுத்துக் கொண்டதால் என் மனம் புத்துணர்வு அடைந்துள்ளது, களத்திற்குத் திரும்ப விரும்புகிறேன். டெஸ்ட், ஒருநாள், டி20 என்று அனைத்து வடிவங்களிலும ஆடத் தயார் என்று நான் அணித்தேர்வுக்குழுவிடம் ஏற்கெனவே உறுதி அளித்து விட்டேன். வலையில் கடுமையாகப் பயிற்சி செய்ய வேண்டியுள்ளது. நான் முறையாகத் தயாராக வேண்டும். அக்டோபர் மத்தியிலிருந்து நான் அனைத்து வடிவங்களுக்கும் முழுதாகத் தயாராகி விடுவேன்.

நான் அதிர்ஷ்டவசமாக அணியில் தேர்வு செய்யப்பட்டாலும், ரன்கள், பீல்டிங்கிற்கு நான் உத்தரவாதம் அளிப்பது கடினம், ஆனால் 100% அர்ப்பணிப்புடன் ஆடுவேன் என்பதில் உறுதியாக இருக்கிறேன். எந்த வடிவத்திலும் எப்போது வேண்டுமானாலும் தென் ஆப்பிரிக்காவுக்காக ஆடுவேன் என்பதையும் உறுதியளிக்கிறேன். இதே வாக்குறுதியைத்தான் 2004-ல் கொடுத்தேன், தற்போதும் அதே வாக்குறுதியை அளிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x