Last Updated : 22 Aug, 2017 03:08 PM

 

Published : 22 Aug 2017 03:08 PM
Last Updated : 22 Aug 2017 03:08 PM

ஆஸ்திரேலிய வழியில் ஆடுகிறது இந்தியா; மாற்றத்துக்குக் காரணம் கோலி: ‘மிஸ்டர் கிரிக்கெட்’ புகழாரம்

இந்திய அணி இப்போது கிரிக்கெட்டை ஆஸ்திரேலிய பாணியில் ஆடுகிறது, இந்த மாற்றத்துக்கு முக்கிய காரணம் கேப்டன் விராட் கோலிதான் என்கிறார் ஆஸ்திரேலியாவின் ‘மிஸ்டர் கிரிக்கெட்’ மைக் ஹஸ்ஸி.

தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக் ஹஸ்ஸி கூறியதாவது:

கடினமான ஆஸ்திரேலிய கிரிக்கெட் பண்பாட்டை இந்திய அணியும் கடைபிடிக்கத் தொடங்கியுள்ளது. கேப்டன் கோலி வெற்றிக்கான தீவிர வேட்கை கொண்டவர். கடந்த கால இந்திய அணியில் இத்தகைய தன்மைகளைப் பார்த்ததில்லை.

கடினமாக ஆடிய இந்திய அணி இதுவரை இல்லை என்று நான் கூறவரவில்லை. ஆனால் தற்போது சவாலுக்குக் களத்தில் குதிக்கத் தயாராக இருக்கின்றனர். இது விராட் கோலி அணியை வழிநடத்திய விதத்தினால் உருவானது. அவர் ஆவேசமாக ஆடுகிறார், இது ஆஸ்திரேலிய வழிதான்.

வரவிருக்கும் ஒருநாள் தொடரில் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் இடையே கடும் போட்டி நிலவும் ஸ்மித் தனிப்பட்ட வீரர்களுக்கிடையேயான போட்டியை வரவேற்பவர், எனவே விராட் கோலியும் ஸ்மித்தும் ஒருவரையொருவர் விஞ்சி விடுவதற்காக ஆடுவார்கள்.

இருவருமே உறுதியான மனநிலை கொண்ட கேப்டன்கள். எனவே ஒருவருக்கு எதிராக மற்றொருவர் நிச்சயம் கடும் சவால்களை அளிப்பார்கள். இந்தியா-ஆஸ்திரேலியா போட்டியிடையே இந்த தனிநபர் போட்டியும் சுவாரசியமானதுதான்.

இரு அணிகளும் கடும் சவாலான மனநிலையில் ஆடுவதால் சிலபல வார்த்தை பரிமாற்றங்களைத் தவிர்க்க முடியாது, ஆனாலும் இது எல்லை மீறாமல் இருப்பது அவசியம், ஒருநாள் போட்டிகளில் பொதுவாக ஸ்லெட்ஜிங் குறைவாக இருக்கும், காரணம் களவியூகம் தள்ளித்தள்ளி அமைக்கப்படும் என்பதால்.

மிட்செல் ஸ்டார்க் ஆட முடியாதது பேரிழப்புதான், ஆனால் பேட் கமின்ஸ் நன்றாக வீசி வருகிறார். பிட்ச்கள் பேட்டிங்குக்குச் சாதகமாக இருக்கும் என்பதால் ஆஸ்திரேலியாவுக்கும் சாதகம்தான்.

இவ்வாறு கூறினார் மைக் ஹஸ்ஸி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x