Published : 18 Aug 2017 11:18 AM
Last Updated : 18 Aug 2017 11:18 AM
கோப்பைகள் பலவென்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி துபாயில் வரும் அக்டோபர் மாதம் கிரிக்கெட் அகாடமியைத் தொடங்குகிறார். இதனை ஆப்பிரிக்கா மற்றும் பிரிட்டனிலும் நீட்டிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
யாரும் சிந்திக்க முடியாததை சிந்திப்பதே களத்தில் தோனியின் வெற்றித் தாரக மந்திரம். களத்துக்கு வெளியேயும் இதே தாரக மந்திரம்தான் அவரின் வெற்றிக்கு வழிகோலுகிறது.
தோனியின் பழைய நண்பரும் முன்னாள் வீரருமான மிஹிர் திவாகர் நடத்தி வரும் நிறுவனம்தான் ஆர்கா ஸ்போர்ட்ஸ் நிறுவனமாகும். இதே நிறுவனம்தான் இந்த அகாடமியையும் நடத்தவுள்ளது, இதற்காக துபாயில் உள்ள பசிபிக் வென்ச்சர்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது ஆர்கா. இதன் மூலம் உலகெங்கும் இந்த அகாடமியின் பயன்களைக் கொண்டு செல்வதே திட்டம்.
இது பற்றி தோனியின் நண்பர் திவாகர் ஸ்போர்ட்ஸ் ஸ்டார் இதழுக்குக் கூறும்போது, “இந்த பிராண்டை உலக அளவில் எடுத்துச் சென்று வாய்ப்பு கிடைக்காத இளைஞர்களுக்கு கிரிக்கெட்டில் வாய்ப்பளிப்பதே இந்த அகாடமியின் நோக்கம்” என்றார்.
என்.ஆர்.ஐ, சிறுவர்களுக்கு கிரிக்கெட் ஆட வாய்ப்பு ஏற்படுத்த இது சிறந்த நடைமேடையாகும் எனவேதான் தோனியின் விருப்பத்துக்கு இணங்க இந்த முயற்சியில் இறங்கியிருப்பதாக பசிபிக் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் பர்வேஸ் கான் தெரிவித்தார். இதனால்தான் பிரிட்டன், அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா ஆகியவற்றின் உரிமைகளை நாங்கள் எடுத்துக் கொண்டுள்ளோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த அகாடமி துபாயில் வரும் அக்டோபர் மாதம் தோனியால் திறக்கப்படுகிறது. இந்த வளாகம் ஸ்பிரிங்டேல் பள்ளியில் உள்ளது. இங்கு சிறந்த வசதிகள், பிட்ச்கள் உள்ளன, பெண்களையும் தயார் செய்து வருகின்றனர்.
ஏற்கெனவே லக்னோ, குர்கவானில் இரண்டு அகாடமிகளைத் தொடங்கியுள்ளார் தோனி. ஆனால் துபாயில் தொடங்கப்படுவது சர்வதேச முயற்சியாகும்.
இந்த அகாடமியில் தோனியே அனைத்தையும் கவனித்துக் கொள்வார், பயிற்சி முறைகள் முதல் தலைமைத்துவ பண்புகளை வளர்த்து விடுவது வரை தோனி செயல்படுவார், இது இளைஞர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் என்கிறது பசிபிக் வென்ச்சர்ஸ் நிறுவனம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT