Published : 12 Aug 2017 02:53 PM
Last Updated : 12 Aug 2017 02:53 PM

ஒருநாள் தொடரில் நான் விளையாடப் போவதில்லையா? யார் சொன்னது? விராட் கோலி அதிர்ச்சி

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் கோலி உட்பட முக்கிய வீரர்களுக்கு பணிச்சுமை காரணமாக ஓய்வு அளிக்கப்படலாம் என்று செய்திகள் வெளியானதற்குக் கோலி அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

“நான் ஓய்வு எடுத்துக் கொள்ள விரும்பினேனா? என் பங்கேற்பு? நான் ஆடவில்லை என்று யார் கூறியது? எங்கிருந்து இது வருகிறது என்று எனக்குத் தெரியவில்லை. நான் விளையாட வேண்டாம் என்று நீங்கள் விரும்பினீர்களென்றால் சொல்லுங்கள். விளையாடுவதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

விரைவில் ஒருநாள் தொடருக்கான அணித்தேர்வுக்காக அமரப்போகிறோம். என்பதில் எங்கள் மனத்தில் திட்டங்கள் உள்ளன, என்னமாதிரியான அணிச்சேர்க்கை தேவை என்பதைப் பேச விரும்புகிறோம். எனவே ஒரு கேட்பனாக இதில் நான் மையமாக இருக்கிறேன், குழுவிடம் என்ன பேச வேண்டும் என்பது எனக்குத் தெரியும்” என்று அதிர்ச்சியுடன் பேசினார் விராட் கோலி.

யுவராஜ், தோனி தேர்வு?

இந்த அணித்தேர்வில் பெரிய சவாலாக இருப்பது தோனி, யுவராஜ் சிங் ஆகியோரது தேர்வுதான், ஏனெனில் கே.எல். ராகுல் முழு உடல் தகுதியுடன் ஆடி வருகிறார், தென் ஆப்பிரிக்காவில் வெற்றி பெற்றவராக மணீஷ் பாண்டே நிற்கிறார், எனவே தோனி, யுவராஜ் சிங் ஆடியே ஆக வேண்டும் இந்தக் ‘குருவிக் கூட்டை’ கலைக்கக் கூடாது என்று கோலி அழுத்தம் கொடுத்தால், ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக் ஆகியோர் பாண்டே, ராகுலுக்கு வழி விடவேண்டும்.

இல்லையெனில் ராகுலுக்காக ரஹானே வழிவிட வேண்டும். சுரேஷ் ரெய்னா வேறு உடல் தகுதி பெற்று விட்டதாகக் கூறியுள்ளார்.

பந்துவீச்சாளர்களில் பிரச்சினையில்லை அஸ்வின், ஜடேஜா ஆகியோர் இருவருக்குமே ஓய்வு அளிக்கப்படலாம் அல்லது ஒருவருக்கு கண்டிப்பாக ஓய்வு அளிக்கப்படும் என்றே தெரிகிறது. குல்தீப் யாதவ் நிச்சயம் அணியில் இடம்பெறுவார், லெக் ஸ்பின்னர் யஜுவேந்திர சாஹல், ஆல்ரவுண்டர் குருணால் பாண்டியா ஆகியோரும் அணியில் இடம் பெறலாம் என்று கூறப்படுகிறது.

கோலியே குல்தீப் யாதவ்வை சிறப்பாகப் புகழ்ந்துள்ளார், ‘குல்தீப் யாதவ்விடம் எந்த ஒரு சூழ்நிலையிலும் பந்தை தைரியமாகக் கொடுக்கலாம். எந்த ஒரு சூழ்நிலையிலும் அவர் பந்து வீச விரும்புவார். நெருக்கமான களவியூகத்திற்கும் அஞ்சாமல் வீசுவார். அவர் தன் திறமை மீது நம்பிக்கை உள்ளவர், தன் திறமையினால் பேட்ஸ்மெனை ஏமாற்ற முடியும் என்று அவருக்கு நம்பிக்கை உள்ளது, இது ஒரு மிகப்பெரிய குணாம்சம். சைனமன் பவுலர் எப்போதுமே எதிர்பாராததை நிகழ்த்தக் கூடியவர், ஒரு புதிர்க்காரணியாக இருக்கக் கூடியவர்.

எனவே இந்த அணித்தேர்வில் முக்கியமான விஷயம் யார் தேர்வாகிறார்கள் என்பதல்ல, யார் தேர்வு செய்யப்படாமல் விடப்படுகிறார்கள் என்பதே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x