Published : 18 Nov 2015 08:57 AM
Last Updated : 18 Nov 2015 08:57 AM
பெங்களூருவில் நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் 4வது நாள் ஆட்டமும் மழையால் கைவிடப்பட்டது.
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 2வது டெஸ்ட் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கடந்த 14ம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 59 ஓவரில் 214 ரன்களுக்கு சுருண்டது. டி வில்லியர்ஸ் 85 ரன் எடுத்தார். இந்திய தரப்பில் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா தலா 4 விக்கெட் கைப்பற்றினர். தொடர்ந்து ஆடிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 22 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்தது.
முரளி விஜய் 28, ஷிகர் தவண் 45 ரன்னுடன் களத்தில் இருந்தனர். மழை காரணமாக 2வது மற்றும் 3வது நாள் ஆட்டம் ரத்தானது. 4-வது நாளான நேற்று ஆட்டம் தொடங்க தாமதம் ஏற்பட்டது. மழை இல்லாத போதும் போட்டி நடப்பதற்கு ஏற்ற வகையில் ஆடுகளம் தகுதியாக இல்லாததால் குறித்த நேரத்தில் 4வது நாள் ஆட்டத்தை தொடங்க முடியவில்லை.
மதியம் 1 மணிக்கு நடுவர்கள் ஆடுகளத்தைப் பார்வையிட்டனர். அப்போது 2 மணிக்கு ஆட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அப்போது திடீரென மழை பெய்தது. இதையடுத்து 4வது நாள் ஆட்டம் கைவிடப்படுவதாக 2.30 மணிக்கு அறிவிக்கப்பட்டது.
கடைசி நாளான இன்று மழை இல்லாமல் இருந்தால் ஆட்டம் 9.15 மணிக்கு தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 நாள் ஆட்டம் முழுவதுமாக ரத்தானதால் இந்த போட்டியில் இனிமேல் முடிவு கிடைக்க வாய்ப்பில்லை. இதனால் 2வது டெஸ்ட் டிராவில் முடிவடைகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT