Published : 27 Nov 2015 04:27 PM
Last Updated : 27 Nov 2015 04:27 PM

3 நாள் போட்டிகள் கடினமானவை: ஹஷிம் ஆம்லா ஏமாற்றம்; விராட் கோலி மகிழ்ச்சி

டெஸ்ட் தொடரை இழந்ததையடுத்து தென் ஆப்பிரிக்க கேப்டன் ஆம்லா ஏமாற்றமடைந்துள்ளார். இந்திய கேப்டன் விராட் கோலி தொடரை வெல்வதே முக்கியம் என்கிறார்.

நாக்பூர் டெஸ்ட் போட்டியில் தோல்வி தழுவி, ஆம்லா தலைமையின் கீழ் தென் ஆப்பிரிக்காவின் 9 ஆண்டுகால தோல்வியின்மை சாதனை முடிவுக்கு வந்ததையடுத்து அவர் ஏமாற்றம் தெரிவித்தார்.

மொஹாலி, நாக்பூர் டெஸ்ட் போட்டிகள் 3 நாட்களில் தென் ஆப்பிரிக்க தோல்வியில் முடிவடைய பெங்களூர் டெஸ்ட் மழையால் 4 நாட்கள் நடைபெறாமல் டிரா ஆனது. இதனையடுத்து இந்தியா டெஸ்ட் தொடரை 2-0 என்று கைப்பற்றியுள்ளது. 4-வது, கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெறுகிறது.

இந்நிலையில் டெஸ்ட் தொடர் தோல்வி குறித்து ஆம்லா கூறும் போது, “நிச்சயமாக, கடும் ஏமாற்றம்தான். மிகவும் கடினமான டெஸ்ட் போட்டி. வெற்றி பெறுகிறோமோ, தோல்வி அடைகிறோமோ, கவுரவமாக நாங்கள் போராட வேண்டும், வீரர்களுக்கு இந்த விதத்தில் நான் எனது பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்களால் முடிந்த வரையில் நின்று ஆட முயன்றோம். பிட்ச் கடினமானது. புதிய பந்தாயினும், பழைய பந்தாயினும் நன்றாக திரும்பியது, எழும்பியது. 3 நாட்களில் முடிவடையும் போட்டிகள் எப்போதும் கடினமானதே” என்றார்.

விராட் கோலி மகிழ்ச்சி:

மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. குறிப்பாக ஒருநாள் மற்றும் டி20 தொடரை அவர்கள் வென்ற பிறகு டெஸ்ட் வெற்றி உண்மையில் மகிழ்ச்சியளிக்கிறது. மொஹாலி, பெங்களூரு மற்றும் இங்கே நல்ல முறையில் ஆடினோம்.

அஸ்வின் உலகத் தரம் வாய்ந்த ஸ்பின்னர், இங்கு நமக்காக அவர் பெரிய விஷயங்களைச் செய்துள்ளார். உலகில் அவர்தான் இப்போது சிறந்த ஸ்பின்னர் என்றே கூற வேண்டும்.

தென் ஆப்பிரிக்க அணியினர் ஓரிரு பார்ட்னர்ஷிப்களை உருவாக்குவார்கள் என்றே எதிர்பார்த்தோம். பந்துவீச்சில் பொறுமை அவசியம், வாய்ப்புக்காகக் காத்திருப்பது அவசியம். அமித் மிஸ்ரா நல்ல பொறுமைசாலியாக வீசினார்.

இது சவாலான பிட்ச் என்பதில் இருவேறு கருத்தில்லை, ஆனால் நல்ல பேட்டிங் உத்தியைச் செலுத்தி ஆடினால் ஆடமுடியும், இதில் சாக்குபோக்குகளுக்கு இடமில்லை. நமது பேட்ஸ்மென்கள் 3 இன்னிங்ஸ்களில் நல்ல உத்தியைக் கடைபிடித்தனர்.

சில வேளைகளில் பவுலர்களுக்குச் சாதகமான விக்கெட்டுகள் அமைந்து விடும். ஒவ்வொரு நாட்டின் மைதானங்களுக்கு ஏற்பத்தான் ஆட வேண்டும். இந்த தொடரில் சுழற்பந்து வீச்சாளர்களின் கை ஓங்கியுள்ளது. தொடரை வெல்வதே முக்கியம். டெல்லி போட்டி எங்கள் சீரான தன்மையை நிரூபிக்க இன்னொரு வாய்ப்பு.

இவ்வாறு கூறியுள்ளார் கோலி.

ஆட்ட நாயகன் அஸ்வின்:

இன்று பிட்ச் சற்றே மந்தமானது. பிட்சில் உதவியிருந்தது, ஆனால் டுபிளேஸ்ஸிஸ், ஆம்லா நன்றாக ஆடினர். ஒரு அணி போராடியது, ஒரு அணி வெற்றிக்காக ஆடியது. பேட்ஸ்மென்கள் சதம் அடிக்க இறங்குகின்றனர், நான் 5 விக்கெட்டுகளை வீழ்த்த களமிறங்குகிறேன். உணவு இடைவேளைக்குப் பிறகு அமித் மிஸ்ரா நன்றாக வீசினார். உணவு இடைவேளைக்குப் பிறகு டுபிளேஸ்ஸிஸ், ஆம்லா ஆகிய முக்கிய விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார்.

தங்களுடைய தடுப்பாட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து களமிறங்குபவர்கள் இந்தப் பிட்ச்களில் நன்றாக விளையாட முடியும், என்றார் அஸ்வின்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x