Published : 23 May 2015 06:03 PM
Last Updated : 23 May 2015 06:03 PM

2013 ஐபிஎல் இறுதிப் போட்டியில் மும்பையிடம் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்குமா சென்னை?

2013-ம் ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டியில் மும்பை இண்டியன்ஸிடன் தோல்வி அடைந்த சென்னை அணி இந்த இறுதிப்போட்டியில் பதிலடி கொடுக்க தயாராகி வருகிறது.

கொல்கத்தா ஈடன் கார்டன்ஸில் நாளை (ஞாயிறு) இரவு நடைபெறும் இறுதிப் போட்டியில் மும்பை இண்டியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

8 ஐபிஎல் தொடர்களில் 6-வது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. இறுதிப் போட்டிகளில் வெல்லும் தந்திரம் அறிந்தவர் தோனி. அந்த விதத்தில் ரோஹித் சர்மாவுக்கு அனுபவம் போதாது.

ஆனால் மும்பை அணி இந்த ஐபிஎல் தொடரில் முதல் 4 போட்டிகளில் தோல்வி அடைந்து அதன் பிறகு தொடர் அதிரடி வெற்றிகளுடன் எழுச்சியுற்று இறுதிக்குத் தகுதி பெற்றது. இந்த அணியின் எழுச்சியில் சச்சின், பாண்டிங், ஜாண்ட்டி ரோட்ஸ் ஆகியோரது பங்களிப்பு குறிப்பிடத்தகுந்தது. இதனால் கடைசி 9 போட்டிகளில் 7-இல் வெற்றி பெற்றது மும்பை.

இதே எழுச்சியின் தொடர்ச்சியாக சென்னையை பிளே ஆஃபில் 25 ரன்கள் வித்தியாசத்தில் எளிதில் வென்றது மும்பை இண்டியன்ஸ்.

சென்னை அணி சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி 14 ஆட்டங்களில் 18 புள்ளிகளை பெற்று அட்டவணையில் முதலிடம் பிடித்தது. நேருக்க்கு நேர் போட்டி என்று எடுத்துக் கொண்டால் மும்பை இண்டியன்ஸ் 11 போட்டிகளிலும் சென்னை 10 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

இரண்டு அணிகளிலும் உள்ள மே.இ.தீவுகள் தொடக்க வீரர்களான லெண்டில் சிம்மன்ஸ், டிவைன் ஸ்மித் பேட்டிங்கில் அடித்து நொறுக்க வாய்ப்புள்ளது. அதே போல் சென்னையில் டிவைன் பிராவோ, மும்பையில் கெய்ரன் போலார்ட். பிராவோ 15 போட்டிகளில் 24 விக்கெட்டுகளுடன் நடப்பு தொடரில் முன்னிலை பெற்றுள்ளார்.

மேலும் இரண்டு சுவையான மோதல்களில் ரோஹித் சர்மா, தோனி உள்ளனர். இந்த மைதானத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக ரோஹித் சர்மா பொறிபறக்கும் 98 ரன்களை விளாசியதை தோனி மறந்திருக்க மாட்டார் என்று நம்பலாம்.

அதே போல் பந்துவீச்சில் அங்கு லசித் மலிங்கா, இங்கு ஆஷிஷ் நெஹ்ரா. இதுவரை நெருக்கடி தருணங்களில் இவர்கள் இருவருமே ஆட்டத்தை தங்கள் அணிக்கு சாதகமாக திருப்பியுள்ளனர்.

அதேபோல் புது முக இளம் வீரர்களில் சென்னை அணிக்காக பவன் நெகியும் மும்பை அணிக்காக ஹர்திக் பாண்டியாவும் உள்ளனர். இரு அணிகளுக்கும் நெருக்கடி ஏற்படும் போது இவர்கள் இருவரில் யார் நாளை இறுதிப் போட்டியில் ஹீரோவாக எழுச்சி பெறுவார்கள் என்பதும் ரசிகர்களிடையே ஆர்வத்தை கூட்டியுள்ளது.

ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான குறைந்த ஸ்கோர் த்ரில்லராக இது இல்லாமல் அதிக ஸ்கோர் த்ரில்லராக அமைய வாய்ப்புள்ளது.

2013 மே 26-ம் தேதி நடைபெற்ற இறுதிப் போட்டியில் இதே கொல்கத்தாவில் குறைந்த ஸ்கோர் த்ரில்லராகவே அமைந்தது. முதலில் பேட் செய்த மும்பை இண்டியன்ஸ் அணி போலார்டின் அதிரடி 60 ரன்களுடன் 148 ரன்களையே எடுத்தது.

தொடர்ந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 125 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி தழுவியது. அப்போது தோனி 45 பந்துகளில் 3 பவுண்டரி 5 சிக்சர்களுடன் 63 ரன்கள் எடுத்து இறுதி வரை களத்தில் அவுட் ஆகாமல் இருந்தும் 149 ரன்கள் என்ற குறைந்த இலக்கை துரத்தி வெற்றி பெற முடியாமல் போய் விமர்சனத்துக்குள்ளானார். அதாவது 36 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் விழுந்த பிறகே தோனி களம் கண்டார். இது விமர்சனத்துக்குரியதானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x