Published : 23 Mar 2017 02:42 PM
Last Updated : 23 Mar 2017 02:42 PM
இந்திய-ஆஸ்திரேலிய மோதல்களில் உச்சம்பெற்ற 2001 தொடருக்குப் பிறகு நடப்பு டெஸ்ட் தொடர் இரு அணிகளும் சளைக்காமல் போட்டி மனப்பான்மையுடன் விளையாடும் ஒரு தொடராக அமைந்துள்ளது என்று முன்னாள் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்தார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆடம் கில்கிறிஸ்ட் கூறியதாவது:
கோலி ஒரு அபாரமான தலைவர், அவர் தன் அணியையும், நாட்டையும் தன்னுடன் அழைத்துச் செல்கிறார். அவர் இதுவரை இந்தத் தொடரில் ரன் எடுக்கவில்லை என்பதே அவர் மீதான பயத்தை அதிகரிக்கிறது, அவர் தரம்சலாவில் பெரிய அளவில் ரன்குவிப்பில் ஈடுபடுவார் என்று தோன்றுகிறது.
இது ஒரு சிறப்பு வாய்ந்த தொடராகும் தொடர் முடிந்தவுடன் வார்த்தைகளை வேறுவிதமாக பயன்படுத்தியிருக்கலாம் என்று இரு அணிகளுமே யோசிக்கும்.
ஆனால் 2008-ம் ஆண்டு தொடரின் போது தகராறு மிக மோசமான எல்லைக்குக் கொண்டு செல்லப்பட்டது, இப்போது அப்படி நடைபெறவில்லை என்பது குறித்து மகிழ்ச்சியே.
கடைசியில் இரு அணியினரும் பரஸ்பரம் மரியாதையுடன் நடந்து கொள்கின்றனர் என்றே நினைக்கிறேன், ஏனெனில் இரு அணியினருக்குமே ஒருவர் பற்றி ஒருவர் பயம் கொள்கின்றனர். இரு அணிகளுமே போர்க்குணம் மிக்க அணிகள்.
ஆஸ்திரேலிய அணி இந்தத் தொடரில் வெளிப்படுத்தும் ஆட்டம் ஆச்சரியமாகவே உள்ளது. அனைவருமே இவ்வாறு உணர்கின்றனர். ஏகப்பட்ட கணிப்புகளுக்கிடையே ஆஸ்திரேலிய அணி மிகச்சிறப்பாக ஆடியதாகவே கருதுகிறேன்.
இது அபாரமான ஒரு டெஸ்ட் தொடர், நிறைய பேர் என்னிடம் கூறுவது போல் 2001 இந்தியத் தொடருக்குப் பிறகு இது சவாலான முறையில் ஆடப்பட்டு வரும் ஒரு தொடர் ஆகும். அப்போது இந்தியா வெற்றி பெற்றது, இப்போது யார் வெற்றி பெறுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இவ்வாறு கூறினார் ஆடம் கில்கிறிஸ்ட்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT