Published : 25 Feb 2017 04:21 PM
Last Updated : 25 Feb 2017 04:21 PM

2 ஆண்டுகளில் மோசமான பேட்டிங் இதுவே: விராட் கோலி ஏமாற்றம்

புனே டெஸ்ட் போட்டியில் சற்றும் எதிர்பாராத விதமாக ஆஸ்திரேலியா இந்தியாவை முற்றிலும் முறியடித்து அபார வெற்றி பெற்றதையடுத்து மோசமான பேட்டிங்கே தோல்விக்குக் காரணம் என்கிறார் கேப்டன் விராட் கோலி.

இந்நிலையில் ஆட்டம் முடிந்து பரிசளிப்பு நிகழ்ச்சியில் விராட் கோலி பேசிய போது, “தொடர்ந்து வெற்றி பெற்று வந்தோம். இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா எங்களை சகல விதங்களிலும் தோற்கடித்து விட்டது.

கடந்த 2 ஆண்டுகளில் எங்களது படுமோசமான பேட்டிங் இதுவே. என்ன தவறு செய்தோம் என்பதைப் பார்க்க வேண்டும். பிட்சை எங்களை விட ஆஸ்திரேலியர்கள் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

எங்களை டெஸ்ட் முழுதும் நெருக்கடிக்குத் தள்ளிய ஆஸ்திரேலியாவே வெற்றி பெறத் தகுதியான அணியாகும். இரண்டு செஷன்கள் மோசமாக ஆடிவிட்டு தரமான அணிக்கு எதிராக மீண்டெழுவது முடியாத காரியம். தோல்விக்கு சாக்குபோக்குகள் கிடையாது. சில வேளைகளில் நாம் நமது சிரம் தாழ்த்தி எதிரணி நம்மை விட நன்றாக ஆடியது என்று பாராட்டுவதைத் தவிர வேறு வழியில்லை” என்றார்.

4502 நாட்களுக்குப் பிறகு இந்தியாவில் வெற்றி: ஸ்மித்

வெற்றி குறித்து ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்மித் கூறும்போது, “நிச்சயம் கடினமாக இருக்கும் என்றே நினைத்தோம். வீரர்கள் விளையாடிய விதம் பெருமையளிக்கிறது. டாஸ் வென்றது கூடுதல் ஊக்கம். ஓகீஃப் பவுலிங் தனிச்சிறப்பானது. எங்களிடம் ஸ்பின்னுக்கு எதிராக சில நல்ல வீரர்கள் உள்ளனர், நல்ல ஸ்பின்னர்களும் இப்போது உள்ளனர்.

இந்தியாவில் ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியில் வென்று 4502 நாட்களுக்குப் பிறகு இந்த வெற்றி கிட்டியுள்ளது. இந்தப் பிட்சில் முதல் இன்னிங்சில் பெரிய முன்னிலைதான் கைகொடுத்தது. ஓகீஃப் சற்றே தனது லெந்தை மாற்றிக் கொண்டவுடன் ஒவ்வொரு பந்திலும் விக்கெட் எடுப்பார் போல்தான் இருந்தது. சதம் எடுப்பதற்கு இந்தப் பிட்சில் அதிர்ஷ்டம் தேவைப்பட்டது. (3 கேட்ச்கள் விடப்பட்டது குறித்து). அதன் பிறகே நிறைய தைரியமும், உறுதியும் தேவைப்பட்டது” என்றார்.

ஆட்ட நாயகன் ஸ்டீவ் ஓகீஃப்: முதல் இன்னிங்ஸ் கொஞ்சம் பூச்சிபறந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் பந்துகள் சறுக்கிக் கொண்டு சென்றன, நேராக வீசுவது பயனளித்தது. எனது முதல் 6 விக்கெட்டுகள் சாதாரணமானவைதான். எங்களது பேட்ஸ்மென்கள் எட்ஜ் எடுக்கக் கூடாது என்பதற்கு கடினமாக உழைத்து ஆடினார்கள்.

நேதன் லயன்: கடுமையாக போராடி ஆட வேண்டும் என்று திட்டமிட்டோம், அதனை நிறைவேற்றினோம். நாங்கள் நிறைய அஸ்வின் பந்துவீச்சைப் பார்த்தோம், இந்த பிட்ச்களில் அவர் செய்ததை அப்படியே செய்ய முடிவெடுத்தோம். இந்தப் பிட்சை நான் எல்லா ஊர்களுக்கும் கொண்டு செல்வேன்.

பயிற்சியாளர் டேரன் லீ மேன்: அருமையான முடிவு. இரு அணிகளுக்குமே சவாலான பிட்ச்தான். இலங்கை தோல்வியிலிருந்து சில பாடங்களைக் கற்றோம். ஆனால் அடுத்த டெஸ்ட் போட்டியில் இதே ஆட்டத்தை மீண்டும் ஆடுவது சவால்தான், நாங்கள் சிறந்த தடுப்பாட்ட உத்தி பற்றியே பேசினோம். பிறகு அடித்து ஆடலாம் என்று முடிவெடுத்தோம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x