Published : 17 Apr 2015 10:20 PM
Last Updated : 17 Apr 2015 10:20 PM

16 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானை வீழ்த்தியது வங்கதேசம்

டாக்காவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணியை வங்கதேசம் 79 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 16 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக 2-வது வெற்றியைச் சாதித்துள்ளது வங்கதேசம்.

முதலில் பேட் செய்த வங்கதேசம், தமிம் இக்பால், முஷ்பிகுர் ரஹிம் ஆகியோரின் அபார சதங்களுடனும், பாகிஸ்தான் விட்ட கேட்ச் உபயங்களினாலும் 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 329 ரன்கள் என்ற தங்களது அதிகபட்ச ஒருநாள் போட்டி ரன் எண்ணிக்கையை எட்டியது. >[பாகிஸ்தான் பந்துவீச்சை புரட்டி எடுத்த தமிம் இக்பால், முஷ்பிகுர் சதங்கள்]

சயீத் அஜ்மல் தனது பந்துவீச்சை திருத்திக் கொண்ட பிறகு விளையாடிய முதல் போட்டியில் 74 ரன்களை விட்டுக் கொடுத்தார். அதிக பட்ச ரன்களை அஜ்மல் விட்டுக் கொடுப்பது இதுவே முதல் முறை. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 45.2 ஓவர்களில் 250 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர்.

330 ரன்கள் இலக்கை எதிர்த்துக் களமிறங்கிய பாகிஸ்தான் கேப்டன் அசார் அலியின் அபாரமான 73 பந்து 72 ரன்களுடன் சுமாரான தொடக்கம் கண்டது.

ஆனால் சர்பராஸ் அகமட் (24), மொகமது ஹபீஸ் (4) ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆக 13-வது ஓவரில் 59/2 என்று ஆனது. ஹபீஸ் சிங்கிள் எடுக்க தாமதமாக கிரீஸை விட்டுக் கிளம்பியதாலும் சவுமியா சர்க்காரின் அபாரமான த்ரோவினாலும் ரன் அவுட் ஆனார்.

அதன் பிறகு அசார் அலியும், ஹாரிஸ் சோஹைலும் இணைந்து 89 ரன்களை 93 பந்துகளில் 3-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். அப்போது அசார் அலி, டஸ்கின் அகமதுவிடம் அவுட் ஆனார். ஹாரிஸ் சோஹைல் 64 பந்துகளில் 4 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 51 எடுத்து ஓரளவு நம்பிக்கை அளித்த நிலையில் டஸ்கின் அகமதுவிடம் அவுட் ஆகி வெளியேறினார். டஸ்கின் அகமது மிக முக்கிய விக்கெட்டுகளை தனது 2 ஸ்பெல்களில் எடுத்தார்.

32-வது ஓவரில் 175/4 என்ற நிலையில் ஃபவாத் ஆலம், மொகமது ரிஸ்வான் இணைந்தனர். இருவரும் இணைந்து 40-வது ஓவர் நடு வரையில் தாக்குப் பிடித்து ஸ்கோரை 217 ரன்களுக்கு உயர்த்தினர். ஆனால் ஒரே ஓவரில் பவாத் ஆலம் (14), அறிமுக வீரர் சாத் நசீம் (0) ஆகியோரை வங்கதேச இடது கை சுழற்பந்து வீச்சாளர் அரபாத் சன்னி வீழ்த்தினார்.

அறிமுக வீரர் மொகமது ரிஸ்வான் அற்புதமாக விளையாடினார். அவர் 58 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் ஆக்ரோஷம் காட்டினார். கடைசியில் ரூபல் ஹுசைன் பந்தை ஒரு விளாசு விளாச அது லாங் ஆனில் கேட்ச் ஆனது.

175/3 என்று இருந்த பாகிஸ்தான் அடுத்த 7 விக்கெட்டுகளை அடுத்த 75 ரன்களில் இழந்து 45.2 ஓவரில் 250 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

வங்கதேச அணியில் டஸ்கின் அகமது, அராபத் சன்னி தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஷாகிப், ரூபல் தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர். ஆட்ட நாயகனாக முஷ்பிகுர் ரஹிம் தேர்வு செய்யப்பட்டார்.

உலகக்கோப்பை கிரிக்கெட்டிற்குப் பிறகே வங்கதேசம் ஆக்ரோஷமான கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மாறாக பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி பகுதி நேர வீச்சாளர்களை முக்கியக் கட்டத்தில் பயன்படுத்தி 10 ஓவர்களை வீசி 79 ரன்களை விட்டுக் கொடுத்து தமிம் இக்பால், முஷ்பிகுர் ரஹிம் ஆகியோரை நிலைகொள்ளச் செய்தார். கேட்ச்களும் கோட்டை விடப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x