Published : 08 Jul 2017 10:46 AM
Last Updated : 08 Jul 2017 10:46 AM
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 5,000 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் லட்சுமணன் தங்கப் பதக்கத்தை வென்றார். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இவர் இளம் வயதில் வெறுங்காலில் புதுக்கோட்டை சாலைகளில் ஓடி பயிற்சி பெற்றதாக அவரது பயிற்சியாளர் லோகநாதன் கூறியுள்ளார்.
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் புவனேஷ்வரில் நடைபெற்று வருகின்றன. இதில் ஆண்களுக்கான பிரிவில் நடந்த 5,000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஜி.லட்சுமணன் தங்கப் பதக்கம் வென்றார். இந்திய ராணுவத்தில் பணியாற்றி வரும் இவர் பந்தய தூரத்தை 14 நிமிடங்கள் 54.48 விநாடிகளில் கடந்து இப்பதக்கத்தை வென்றார்.
தங்கப் பதக்கம் வென்ற லட்சுமணன் பற்றி அவரது பயிற்சியாளர் எஸ்.லோக நாதன் நிருபர்களிடம் கூறியதாவது:
லட்சுமணன் தனது சிறு வயதில் ஓட்டப்பந்தய வீரராகும் ஆசையில் என்னிடம் வந்து சேர்ந்தார். வாழ்க்கை யில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று லட்சுமணனுக்குள் இருந்த தணியாத ஆர்வத்தைக் கண்டு நான் அவருக்கு பயிற்சி அளித்தேன். தந்தை இல்லாத நிலையில், லட்சுமணனின் தாயார் தினக்கூலியாக வேலை பார்த்து அவரை வளர்த்தார். தடகளப் போட்டிகளைப் பற்றி அதிகம் தெரியாத நிலையிலும், தன் மகனின் முயற்சிகளுக்கு அவர் உறுதுணையாக இருந்தார். வறுமையான நிலையிலும் தன் முயற்சிகளை கைவிடாத லட்சுமணன் புதுக்கோட்டை சாலைகளில் தினமும் அதிகாலை நேரத்தில் வெறுங்காலில் ஓடி பயிற்சி பெற்று இந்த நிலைக்கு உயர்ந்துள்ளார்.
ஆசிய தடகளப் போட்டியில் லட்சுமணன் தங்கம் வென்று, நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளது மகிழ்ச்சி அளிக் கிறது. ஆசிய தடகளப் போட்டியைத் தொடர்ந்து ஒலிம்பிக் போட்டியிலும் அவர் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT