Last Updated : 27 Apr, 2017 03:07 PM

 

Published : 27 Apr 2017 03:07 PM
Last Updated : 27 Apr 2017 03:07 PM

வலுக்கும் ஐசிசி, பிசிசிஐ மோதல்!- சாம்பியன்ஸ் கோப்பையில் இந்தியா இடம்பெறுமா?

சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் வாரியம் இன்னும் அறிவிக்கவில்லை. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் (ஐசிசி) வருமான பகிர்வு தொடர்பான பிரச்சினையால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக யூகங்கள் எழுந்துள்ளன.

ஜூன் 1ஆம் தேதி சாம்பியன்ஸ் கோப்பை தொடர் தொடங்கவுள்ளது. 8 அணிகள் பங்கேற்கவுள்ள இந்த தொடர் இங்கிலாந்தில் நடக்கிறது. இதற்கான அணிகள் ஏப்ரல் 25ஆம் தேதிக்குள் அறிவிக்கப்பட வேண்டும் என ஐசிசி அறிவித்திருந்தது. பங்கேற்கும் மற்ற 7 அணிகள் அறிவிக்கப்பட்டுவிட்டாலும் இந்திய கிரிக்கெட் வாரியம் கடைசி தேதி கடந்தும் இன்னும் அணி விவரத்தை அறிவிக்கவில்லை.

ஐசிசி, தனது நிதி அமைப்பு மற்றும் நிர்வாக அமைப்பில் சில மாறுதல்களைக் கொண்டு வந்துள்ளது. இதனால் பிக் த்ரீ (Big Three) என அழைக்கப்படும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் வாரியங்களின் செல்வாக்கு மற்றும் வருமானம் குறையும் நிலை ஏற்படும். இந்திய கிரிக்கெட் வாரியம் அந்த மாறுதல்களை எதிர்த்து வருகிறது. இதையொட்டியே தற்போது இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கும் - ஐசிசிக்கும் பிரச்சினை எழுந்துள்ளதாகத் தெரிகிறது.

துபாயில் நடந்த ஐசிசியின் நிர்வாகக் கூட்டத்தில் இந்த புது நிதி அமைப்பு, உலகிலேயே பணக்கார கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ எதிர்ப்பு தெரிவித்தும், நிறைவேற்றப்பட்டது. இந்த கருத்து வேறுபாடால், சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலிருந்தே இந்திய அணி விலகலாம் என்றும் யூகங்கள் எழுந்துள்ளன.

புது விதிமுறைகளால், இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு 277 மில்லியன் டாலர் வரை அடுத்த 8 ஆண்டுகளில் வருமானம் குறைய வாய்ப்பு உள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அடுத்த சில நாட்களில் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் என கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x