Published : 11 Jul 2015 07:34 PM
Last Updated : 11 Jul 2015 07:34 PM
தம்புல்லாவில் சனிக்கிழமை நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இலங்கையை, பாகிஸ்தான் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது.
டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய பாகிஸ்தான் தற்போது ஒருநாள் தொடரையும் கைப்பற்ற முனைப்புடன் ஆடி வருகிறது.
டாஸ் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார் பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி. இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்துள்ளது. இதில் ஹபீஸ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 45.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 259 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் ஹபீஸ் 95 பந்துகளில் 10 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 103 ரன்களை விளாசினார். ஷோயப் மாலிக் வின்னிங் ஷாட்டை தில்ஷனின் பந்தை சிக்சருக்கு அடித்து முடித்தார். அவர் 45 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 55 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.
குசல் பெரேரா-தில்ஷான் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 44 ரன்கள் சேர்த்தது. பெரேரா 26, பின்னர் வந்த திரிமானி 23, தரங்கா 20 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் ஒன்றும் சரியாக மாட்டாத தில்ஷான் 65 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து வெளியேறினார். அப்போது 26.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்திருந்தது பாகிஸ்தான். தில்ஷன் அடித்த ஆஃப் சைடு ஷாட்கள் லெக் திசையில் மிட்விக்கெட்டுக்குச் சென்றன. தில்ஷன் ஆடிய மிக மோசமான இன்னிங்ஸ் இது என்று வர்ணிக்கலாம். 9 பந்துகளில் 3, பிறகு 35 பந்துகளில் 19, பிறகு 58 பந்துகளில் 35, கடைசியில் 65 பந்துகளில் 38 ரன்களில் அவுட்.
5-வது விக்கெட்டுக்கு இணைந்த கேப்டன் மேத்யூஸ்-தினேஷ் சன்டிமால் ஜோடி 82 ரன்கள் சேர்த்து இலங்கையை சரிவிலிருந்து மீட்டது. மேத்யூஸ் 38 ரன்களில் (54 பந்துகள்) ஆட்டமிழக்க, பின்னர் வந்த திசாரா பெரேரா 1 ரன்னில் வெளியேற, ஸ்ரீவர்த்தனா களம்புகுந்தார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய சன்டிமால் 56 பந்துகளில் அரைசதம் கண்டார். ஸ்ரீவர்த்தனா 22 ரன்களில் வெளியேற, 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்தது இலங்கை.
பாகிஸ்தான் தரப்பில் ஹபீஸ் 10 ஓவர்களில் 41 ரன்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஹபீஸ் சதம்
பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்களான கேப்டன் அசார் அலி 21, அஹமது ஷெஸாத் 29 ரன்களில் வெளியேற, ஹபீஸுடன் இணைந்தார் பாபர் ஆஸம். இந்த ஜோடி 58 ரன்கள் சேர்த்தது. பாபர் 25 ரன்களில் வெளியேற, ஷோயிப் மாலிக் களம்புகுந்தார். இதனிடையே ஹபீஸ் சிக்ஸர் அடித்து 58 பந்துகளில் அரைசதத்தை எட்டினார்.
இதன்பிறகு சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் விரட்டிய ஹபீஸ், பெரேரா பந்துவீச்சில் பவுண்டரி அடித்து 93 பந்துகளில் சதத்தை எட்டினார். இது அவருடைய 10-வது சதமாகும். அவர் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து முகமது ரிஸ்வான் களமிறங்க, மாலிக் அதிரடியில் இறங்கினார்.
தில்ஷான் வீசிய 46-வது ஓவரின் 2-வது பந்தில் மாலிக் சிக்ஸரை விளாச, 4 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது பாகிஸ்தான். மாலிக் 45 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 55, ரிஸ்வான் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஹபீஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது பாகிஸ்தான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT