Published : 12 Sep 2015 03:09 PM
Last Updated : 12 Sep 2015 03:09 PM

மேக்ஸ்வெல்லின் அரிய திறமை,கமின்ஸ் பந்துவீச்சைக் கடந்து மோர்கனால் இங்கிலாந்து வெற்றி

லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவின் 300 ரன்கள் வெற்றி இலக்கை துரத்தி அபாரமாக வென்று தொடரை 2-2 என்று சமன் செய்தது.

இதில் மேக்ஸ்வெல் பேட்டிங்கில் 30/3 என்று ஆஸ்திரேலியா தத்தளித்துக் கொண்டிருந்த போது இறங்கி, விளாசித் தள்ளியதோடு, பிற்பாடு மோர்கன், லியாம் பிளெங்கெட் ஆகியோருக்கு அற்புதமான கேட்ச்களையும் பிடித்து சவாலாகத் திகழ்ந்தார்.

கிளென் மேக்ஸ்வெல் 10 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 64 பந்துகளில் 85 ரன்கள் விளாச, பெய்லி (75), மேத்யூ வேட்(50 நாட் அவுட், 26 பந்து 3 பவுண்டரி 3 சிக்சர்) ஆகியோரின் ஆட்டத்தினால் 7 விக்கெட்டுகள இழப்புக்கு 299 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 15.4 ஓவர்களில் 89/3 என்ற நிலையிலிருந்து கேப்டன் மோர்கன் (92 ரன்கள், 92 பந்து 8 பவுண்டரி 2 சிக்சர்) விளாச அவருக்கு ஸ்டோக்ஸ், டெய்லர் பேர்ஸ்டோ, மொயீன் அலி ஆகியோர் தேவைப்பட்ட பங்களிப்பைச் செய்ய இங்கிலாந்து 48.2 ஓவர்களில் 304/7 என்று வெற்றி பெற்றது.

இங்கிலாந்து அலெக்ஸ் ஹேல்சை (0) இழந்தாலும், ஜேசன் ராய் (36 ரன்கள் 33 பந்துகள்), ஜேம்ஸ் டெய்லர் (42 பந்தில் 41 ரன்) மூலம் ஓரளவு எழுச்சி பெற்றது. ராய், ஹேல்ஸ் ஆகியோரை கமின்ஸ் வீழ்த்த டெய்லர் மார்ஷிடம் ஆட்டமிழந்த போது இங்கிலாந்து 15.4 ஓவர்களில் 89/3 என்று இருந்தது.

அதன் பிறகு பென் ஸ்டோக்ஸ், மோர்கனுடன் இணைந்தார். ஆஸ்திரேலியா அணியில் ஜேம்ஸ் பேட்டின்சன் 9 ஓவர்களில் 73 ரன்கள் கொடுத்து சாத்துமுறை வாங்கினார். ஹேஸ்டிங்ஸ் என்ற பவுலர் 6.2 ஓவர்களில் 56 ரன்கள் கொடுத்தார். மோர்கன், ஸ்டோக்ஸ் ஜோடி 91 ரன்களை 4-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். 54 பந்துகளில் 41 ரன்கள் எடுத்த ஸ்டோக்ஸ் அப்போது மார்ஷ் பந்தில் பவுல்டு ஆனார். பிறகு பேர்ஸ்டோ (31), மோர்கன் ஜோடி 6 ஓவர்களில் 5-வது விக்கெட்டுக்காக 58 ரன்களை விளாசித் தள்ளினர். ஸ்கோர் 40வது ஓவரில் 238/4 என்று மிகவும் எளிதான நிலைக்கு வந்தது.

ஆனால் அப்போது 92 ரன்களில் சதம் உறுதி என்று ஆடி வந்த மோர்கன், கமின்ஸ் பந்தை கட் ஆட, பந்து மேக்ஸ்வெலுக்கு தள்ளி சென்றது, ஆனால் வலது புறம் அந்தரத்தில் பாய்ந்து மிக அற்புதமான கேட்ச் ஒன்றைப் பிடித்தார் மேக்ஸ்வெல். பிறகு லியாம் பிளெங்கெட்டின் ஷாட் ஒன்று சிக்ஸருக்குச் சென்று கொண்டிருந்ததை எழும்பி அபாரமாக கேட்சை பிடித்தார், ஆனால் பேலன்ஸ் தவறி எல்லைக் கோட்டுக்கு வெளியே பந்துடன் சென்று விடுவோம் என்று நினைத்த அவர் பந்தை உயரே விட்டெறிந்து பிறகு பேலன்சை மீண்டும் பெற்று விட்டெறிந்த பந்தை பிடித்தார்.

முன்னதாக ஸ்டோக்ஸ் 11 ரன்களில் இருந்த போது, மார்கஸ் ஸ்டாய்னிஸ் பந்தை எட்ஜ் செய்தார் பந்தை மேத்யூ வேட் பிடித்தார், ஆனால் தரையில் பட்டு பிடித்ததாக 3-வது நடுவர் ஜோ வில்சன் தீர்ப்பளித்தார். பிறகு மேத்யூ வேட், மொயீன் அலிக்கும் கேட்ச் ஒன்றை விட்டார்.

மோர்கன், பிளங்கெட் விக்கெட்டுகளை மேக்ஸ்வெல் தனது அரிய திறமையினால் கேட்ச் பிடித்து இல்லாத விக்கெட்டை விக்கெட்டாக மாற்றினாலும் மொயீன் அலி, டி.ஜே. வில்லே ஆகியோர் இங்கிலாந்து வெற்றியை உறுதி செய்தனர், குறிப்பாக டி.ஜே வில்லே சிக்சருடன் இலக்கைக் கடந்தார்.

ஆஸ்திரேலிய பந்து வீச்சு கமின்ஸ் (4/49) நீங்கலாக மிக மோசமாக இருந்தது, நிறைய ஓவர் பிட்ச் பந்துகளை வீசினர். வெளுத்து வாங்கும் பந்துகள் அதிகம் விழுந்தன, குறிப்பாக ஹேஸ்டிங்ஸ், பேட்டின்சன் படுமோசம். ஸ்விங் இல்லை வேகம் இல்லை, இதனால் இங்கிலாந்து பேட்ஸ்மென்கள் பிரச்சினைக்குள்ளாகவில்லை.

ஆட்ட நாயகனாக மோர்கன் தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x