Published : 05 Dec 2014 02:50 PM
Last Updated : 05 Dec 2014 02:50 PM
அடிலெய்டில் நடைபெற்ற இந்தியா-கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டத்தில் 4 இந்திய வீரர்கள் அரைசதம் எடுத்தனர். இந்தியா 375 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து ஆடிய கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணி 83 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. ஆட்டம் டிரா ஆனது. இசாந்த் சர்மா 5 ஓவர்களில் 8 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆரோன், உமேஷ், கரன் சர்மா ஆகியோர் தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர்.
முன்னதாக முரளி விஜய் 39 ரன்களுடனும், விராட் கோலி 30 ரன்களுடனும் முதல் நாள் ஆட்டத்தை இன்று தொடர்ந்தனர். உணவு இடைவேளையின் போது 236/4 என்று இருந்தது இந்தியா. கோலி 94 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 66 ரன்களுக்கும், முரளி விஜய் 60 ரன்களுக்கும் ரிட்டையர்ட் அவுட் ஆயினர்.
கோலிக்கு ஒரு கேட்ச் விடப்பட்டது. விஜய், கோலி இணைந்து 123 ரன்கள் சேர்த்தனர். முதல் நாளில் இந்தியா 36/2 என்று சரிவு கண்ட போது இவர்கள் இன்னிங்ஸை நிலை நிறுத்தினர்.
அஜிங்கிய ரஹானே 64 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் எடுத்து ரிட்டையர்டு அவுட் ஆனார். ரோஹித் சர்மா 5 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 48 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா மீண்டும் அரைசதம் கண்டார். அவர் 67 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்தார்.
சுரேஷ் ரெய்னா 2 பவுண்டரி ஒரு சிக்சருடன் 20 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 2 பவுண்டரி ஒரு சிக்சருடன் 23 ரன்களையும் எடுத்தனர்.
முதல் இன்னிங்ஸில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணி 243 ரன்களுக்குச் சுருண்டது. மொகமது ஷமி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற மீண்டும் ஆக்ரோஷமாக வீசிய வருண் ஆரோன் 14.3 ஓவர்கள் வீசி 2 மைடன்களுடன் 41 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். லெக்ஸ்பின்னர் கரன் சர்மா 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT