Published : 16 Jul 2015 05:53 PM
Last Updated : 16 Jul 2015 05:53 PM
லார்ட்ஸில் நடைபெறும் ஆஷஸ் தொடர் 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலியா வார்னர் விக்கெட்டை இழந்து 104 ரன்கள் எடுத்துள்ளது.
கிறிஸ் ராஜர்ஸ் 43 ரன்களுடனும், ஸ்டீவ் ஸ்மித் 16 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். தொடக்கத்தில் நிதானமாக ஆடிய வார்னர் பிறகு 7 பவுண்டரிகளை விளாசி 42 பந்துகளில் 38 ரன்களுடன் அபாயகரமாகத் திகழ்ந்தார்.
அப்போது ஆட்டத்தின் 15-வது ஒவரில் ஆஃப் ஸ்பின்னர் மொயீன் அலி பந்து வீச அழைக்கப்பட்டார். முதல் பந்தே ஒரு சுழற்று சுழற்றி மிட் ஆனுக்கும் மிட்விக்கெட்டுக்கும் இடையே ஒரு பவுண்டரி விளாசி மொயீனை வரவேற்றார் வார்னர். அடுத்த பந்து மேலேறி வந்து மேலும் ஒரு பவுண்டரி அடித்தார்.
திட்டம் என்னவெனில் மொயீன் அலியின் ஓர்மையை சீர்குலைப்பதே. ஆனால் அதே ஓவரில் கடைசி பந்தில் பொறுமையிழந்த வார்னர் மேலும் ஒரு முறை மேலேறி வந்து ஷாட் அடித்தார், அது மட்டையில் சரியாகச் சிக்கவில்லை, மொயீன் அலி முன்னமேயே பார்த்து விட்டார் போல்தான் தெரிந்தது. அதனால் கொஞ்சம் பந்தை இழ்த்து விட்டார். வார்னர் ஷாட் ஆட அது எக்ஸ்ட்ரா கவரில் மேல் எழும்பியது, ஆண்டர்சன் தனது வலப்புறமாக சில அடிகள் ஓடி எளிதான கேட்சை பிடித்தார்.
அதாவது 15 ஓவர்களில் 78 ரன்கள் என்ற ஆரோக்கியமான டெஸ்ட் ரன் விகிதத்தில் சென்று கொண்டிருந்த போது மேலும் ஒரு முறை மொயீன் அலியை குறைவாக எடைபோட்டு அடிக்கப் போனார் வார்னர், அதனால் வெளியேறினார்.
முன்னதாக தனது 24-வது பந்தில்தான் முதல் பவுண்டரியையே அடித்த வார்னர். அடுத்த 18 பந்துகளில் மேலும் 6 பவுண்டரிகளை அடித்து அபாயகரமாகத் திகழ்ந்தார். 7 பவுண்டரிகளில் மார்க் உட் பந்தில் மட்டும் 5 பவுண்டரிகள் விளாசினார் வார்னர். நிதானமிழந்து கூடுதல் ஆக்ரோஷத்தில் உணவு இடைவேளைக்கு முன்பாகவே பெவிலியன் திரும்பினார் வார்னர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT