Published : 20 Nov 2014 05:17 PM
Last Updated : 20 Nov 2014 05:17 PM
கான்பெராவில் நேற்று நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய ரசிகர்கள் வரம்பு மீறியுள்ளனர். ஆனால் பாதிக்கப்பட்ட இம்ரான் தாஹிர் புகார் எதுவும் அளிக்கவில்லை.
தேர்ட் மேன் பவுண்டரி அருகே பீல்டிங் செய்து கொண்டிருந்தார் இம்ரான் தாஹிர். இவருக்கு அடிக்கடி தனது தாடியைச் சொரியும் பழக்கம் இருந்து வந்துள்ளது.
இதனைக் கண்ட கான்பெரா ரசிகர்கள், அவரை கடுமையாக கேலி செய்தனர். நிறவெறித்தனம் அதில் ஊடுருவியிருந்ததாக ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
அதாவது, அவர் தாடியைச் சொறிவது பற்றி ரசிகர்கள் கேலிக்குரல் எழுப்பிக் கொண்டிருந்த போது திடீரென ஒரு ரசிகர், "உன்னுடைய செல்லப் பிராணியான ஒட்டகத்துக்கு சொறிந்து விட வேண்டியதுதானே?” என்று கேலி பேசினார்.
கடுப்பாகிப் போன இம்ரான் தாஹிர் அந்த ரசிகர் பக்கம் திரும்பி முறைத்தார். ஆனால் நடுவர்களிடம் அதிகாரபூர்வ புகார் எதனையும் அளிக்கவில்லை.
இம்ரான் தாஹிர் நேற்று 6 ஓவர்கள் வீசி 40 ரன்கள் கொடுத்தார். காயம் காரணமாக பேட்டிங்கில் களமிறங்க முடியாமல் போனது.
ஏற்கெனவே, 2 ஆண்டுகளுக்கு முன்பு அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் 260 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டைக் கூட கைப்பற்ற முடியாமல் போனார் இம்ரான் தாஹிர்.
அப்போது முதல் இம்ரான் தாஹிரைக் கண்டாலே ஆஸி. ரசிகர்களின் கேலிப்பேச்சு தொடங்கிவிடும்.
தொடர்ந்து பாகிஸ்தான் வம்சாவளி வீரர்கள் அல்லது பாகிஸ்தானிய வீரர்களை ஆஸி. ரசிகர்கள் நிறவெறி கேலிக்குட்படுத்தி வருவதும் கவலைக்குரிய அம்சம் என்று அந்தப் பத்திரிகை செய்து தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT