Published : 05 Jan 2017 07:56 PM
Last Updated : 05 Jan 2017 07:56 PM

தென் ஆப்பிரிக்க அணியை விட்டுச் செல்கிறார் கைல் அபாட்

தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் கைல் அபாட் தென் ஆப்பிரிக்க அணியை விடுத்து இங்கிலாந்து கவுண்டி ஹாம்ப்ஷயர் அணிக்கு விளையாட முடிவெடுத்துக் கிளம்புகிறார்.

கைல் அபாட்டுடன் இது குறித்து கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா வாரியம் மேற்கொண்ட பேச்சு வார்த்தை முயற்சிகள் தோல்வியடைந்தன, தென் ஆப்பிரிக்காவுக்கு தொடர்ந்து விளையாடுமாறும் தென் ஆப்பிரிக்காவை விட்டுச் செல்ல வேண்டாம் என்றும் அபாட்டை கிரிக்கெட் வாரியத்தினால் சமாதானப்படுத்த முடியவில்லை. எனவே தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்துடனான கைல் அபாட்டின் ஒப்பந்தம் உடனடியாக முடிவுக்கு வருகிறது.

இலங்கைக்கு எதிராக இவர் ஆடும் 2-வது டெஸ்ட் போட்டிதான் கைல் அபாட்டின் சர்வதேச கிரிக்கெட் கடைசி போட்டியாக இருக்க வாய்ப்புள்ளது. இவர் இங்கிலாந்துக்கு ஆடுவதற்கு இன்னும் காலம் ஆகலாம் என்று தெரிகிறது. இவருடன் ரைலி ரூசோவ்வும் ஹாம்ப்ஷயர் செல்கிறார்.

கைல் அபாட் இது குறித்து கூறும்போது, “கடினமான முடிவுதான், ஆனால் சரியான முடிவு என்றே கருதுகிறேன். சில இரவுகள் சரியான முடிவுதான் எடுக்கிறேனா என்ற கேள்வியுடன் தூங்கச் சென்றேன். ஆனால் காலையில் எழுந்திருக்கும் போது ஹாம்ப்ஷயர் செல்வது சரியான முடிவுதான் என்ற தெளிவு பிறந்தது.

கடந்த சில மாதங்களில் நான் அணியிலிருந்து நீக்கப்படுவேன் என்ற உணர்வு ஏற்படாத நாளே இல்லை எனலாம். நான் தென் ஆப்பிரிக்க கிரிகெட்டுக்கு அர்ப்பணிப்புடன் இல்லையெனில் இந்த முடிவை நீண்ட காலம் முன்பே எடுத்திருப்பேன்.

பிப்ரவரி வந்தால் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகி 4 ஆண்டுகள் ஆகிவிடும். தென் ஆப்பிரிக்காவுக்கு நான் எந்த மட்டத்தில் ஆடினாலும் அங்கு இட ஒதுக்கீடு முறை இருந்தே வந்தது, இன்னும் இருந்து வருகிறது. ஆனால் இதனை நான் என் வெளியேற்றத்துக்கான காரணமாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இனியும் மாட்டேன். நானும் பில்களுக்கு பணம் செலுத்த வேண்டும், நானும் மளிகை சாமான்கள் வாங்கியாக வேண்டும்” என்றார்.

தென் ஆப்பிரிக்க கேப்டன் டுபிளெசிஸ் கூறும்போது, “இந்த வழியில் நாங்கள் இப்படி நடப்பதை ஒருபோதும் விரும்பியதில்லை. இதனை நாங்கள் எதிர்பார்க்கவில்லை, எங்கள் கட்டுப்பாட்டை விட்டு விஷயங்கள் வெகுதூரம் சென்று விட்டன. நாங்கள் அனைவரும் கைல் அபாட்டிடம் பேசி அவர் மனதை மாற்ற முயற்சி செய்தோம் ஆனால் அவர் ஏற்கெனவே ஒரு முடிவுக்கு வந்திருந்தார். என்ன... கைல் ஓரிரு விக்கெட்டுகளை வீழ்த்தி தனது கடைசி டெஸ்ட் போட்டியை முடித்திருந்தால் மகிழ்ச்சியடைந்திருப்போம்.

வாய்ப்பு, பணம், மாற்றம் என்று பல விஷயங்கள் இதில் உள்ளன. ஆனால் கைல் இதில் எதனை நாடுகிறார் என்று எனக்குத் தெரியவில்லை. அவர் பாதுகாப்பு கேட்கிறார், பாதுகாப்பு வேண்டும் என்று நினைக்கிறார். தென் ஆப்பிரிக்காவுக்கு அவர் ஆட வேண்டும் என்றே நான் விரும்பினேன், ஆனால் அவரது முடிவை மதிக்கிறேன், ஆனால் ஏற்றுக் கொள்ளவில்லை” இவ்வாறு வருத்தமாகக் கூறினார் டுபிளெசிஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x