Last Updated : 09 Mar, 2017 10:34 AM

 

Published : 09 Mar 2017 10:34 AM
Last Updated : 09 Mar 2017 10:34 AM

ஜென்டில்மேன் ஆட்டத்தில் ‘ஏமாற்றுக்காரர்’ ஸ்மித்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வக்காலத்து வாங்குகிறது

கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் சிறந்த முன்மாதிரி வீரர், இந்தியாவுக்கு எதிரான பெங்களூரு டெஸ்ட் போட்டியில் டிஆர்எஸ் முறையை பயன்படுத்திய விவகாரத்தில் அவர் மீதும் அணியினர் மீதும் மூர்க்கத்தனமான குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

பெங்களூரு டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் ஸ்மித் 28 ரன்களில் உமேஷ் யாதவ் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அப்போது அவர் களத்தில் இருந்தபடி ஓய்வறையில் இருந்த தங்களது அணியின் தொழில்நுட்ப குழுவினர், வீரர்களிடம் டிஆர்எஸ் வாய்ப்பை பயன்படுத்தலாமா என சைகையில் கேட்டார்.

விதிமுறைக்கு மாறாக ஸ்மித் செயல்பட்டதை களநடுவரான இங்கிலாந்தின் நைஜல் லாங்கும் உடனடியாக கவனித்தார். அதே வேளையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட வீரர்களும் இதை பார்த்தனர். இதனால் இந்திய வீரர்கள் ஸ்மித்தை சூழ்ந்தனர். ஆனால் நடுவர் தலையிட்டு ஸ்மித்தை களத்தில் இருந்து வெளியேற்றினார்.

ஐசிசி விதிகளின்படி டிஆர்எஸ் முறையை எதிர்முனையில் உள்ள பேட்ஸ்மேனிடம் மட்டுமே ஆலோசனை செய்து பயன் படுத்த வேண்டும். இதை தவிர்த்து வெளியில் இருந்து எந்தவித ஆலோசனைகளையும் பெறக் கூடாது. போட்டி முடிவடைந்த பிறகு இந்த விவகாரம் தொடர்பாக விராட் கோலி கூறும்போது, “ஸ்மித் எல்லை தாண்டி நடந்து கொண்டதாக’’ குறிப்பிட்டார்.

ஆனால் ஸ்மித்தோ, “அந்த சமயத்தில் எனக்கு புத்தி மங்கி விட்டது. நான் பெவிலியனை பார்த் திருக்கக்கூடாது. யாரும் ஆட்ட விதி களை மீறும் நோக்கில் விளையாடு வதில்லை’’ என்று தெரிவித்தார்.

ஆனால் கோலியோ, “இது முதன் முறையாக நடைபெற வில்லை. கடந்த 3 நாட்களாகவே இந்த செயலில் அவர்கள் ஈடுபட் டனர். இதுதொடர்பாக நான் ஏற்கெனவே களநடுவரிடம் புகார் செய்தேன். இதுபோன்ற செயல் களை நிறுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு வேறு பெயர் உண்டு, அந்த வார்த்தையை (ஏமாற்று வேலை) நான் பயன் படுத்த விரும்பவில்லை’’ என்றும் ஸ்மித் மீதான குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

இவரது குற்றச்சாட்டுக்கு வலு சேர்ப்பதாக ஹேண்ட்ஸ்கம்பின் ட்விட்டர் பதிவு அமைந்தது. சர்ச்சை எழுந்தபோது ஸ்மித்துடன் களத்தில் இருந்த அவர் இதுதொடர் பாக தனது பதிவில், “டிஆர்எஸ் முறையை பயன்படுத்துவது தொடர்பாக ஸ்மித் என்னிடம் கேட்டார். ஆனால் நான் விதிகளை முறையாக அறிந்திருக்கவில்லை என்பதால் பெவிலியனை பார்க்கு மாறு கூறினேன். இதனால் ஆட்டத் தின் அழகு குலைந்துவிடாது’’ என்று தெரிவித்துள்ளார்.

டிஆர்எஸ் முறையை ஆஸ்தி ரேலிய அணி ஒன்றும் முதன் முறையாக தற்போது பயன்படுத்த வில்லை. அந்த அணி இந்த முறை, அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்தே இதை அணுகி வருகிறது. ஜென்டில்மேன் ஆட்டமாக கருதப்படும் கிரிக்கெட் ஸ்மித்தின் செயல் ஏமாற்றும் வேலையாகவே அமைந்துள்ளதாக பார்க்கத் தோன்றுகிறது.

ஆனால் ஆஸ்திரேலிய கிரிக் கெட் வாரியமோ ஸ்மித்துக்கு ஆதர வாக கருத்து தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கிரிக்கெட் ஆஸ்தி ரேலியாவின் தலைமை செயல் அதிகாரி ஜேம்ஸ் சுதர்லேண்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘‘ஸ்மித்தின் நேர்மை மீதும், ஆஸ்திரேலிய அணி மற்றும் ஓய்வறை மீதும் மூர்க்கத்தமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப் பட்டுள்ளதாக கண்டறிந்துள்ளோம். ஸ்மித் தலை சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் மனிதர் ஆவார். வளரும் வீரர்களுக்கு அவர் முன்னுதாரணமாக இருந்து வருகிறார். அவரது நடவடிக்கை களில் தவறான நோக்கம் இருந்திருக்காது என நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

எங்கள் ஒருமைப்பாட்டை இழிவு படுத்தும் வகையில் எழும் கருத்து களையும், நியாயமற்ற தந்திரங் களை கையாண்டதாக கூறுவதை யும் நாங்கள் நிராகரிக்கிறோம். இந்த விஷயத்தில் ஸ்மித்துக்கு துணையாக இருப்போம். ஆஸ்தி ரேலிய கிரிக்கெட் வீரர்கள் நாட்டுக்காக விளையாடுவதை பெறுமையாகவே கருதுகிறார்கள்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் டேரன் லேமனும், ஸ்மித் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறும்போது,

‘‘டிஆர்எஸ் முறையில் ஓய்வறையின் உதவியை நாங்கள் ஒருபோதும் அணுகவில்லை. இதை கேட்ப தற்கே ஆச்சர்யமாக இருக்கிறது. கோலி அவருடைய கருத்தை தெரிவித்துள்ளார். நாங்கள் எங்கள் கருத்தை தெரிவித்துள்ளோம். ஆனால் ஆட்டத்தை சரியான வழியிலேயே நாங்கள் விளையாடினோம்’’ என்றார்.

கிளார்க் கவலை

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறும்போது, “டிஆர்எஸ்-ஐ பயன்படுத்த ஆஸ்தி ரேலிய அணி இந்த வழிமுறையை கையாண்டதா என்பதை கண்டறிய வேண்டும். அவர்கள் அதை செய்திருந்ததால் அது ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயம் அல்ல’’ என்றார்.

இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விசாரணை நடத்த வேண் டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ் கரும், தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கங்குலியும் வலி யுறுத்தி உள்ளனர்.

மதி மயங்கிய ஸ்மித்தை ஐசிசி பார்த்துக்கொள்ளும்

ஸ்மித்தின் செயலை மையப்படுத்தி டிஆர்எஸ் என்பது “ஓய்வறை மேல்முறையீடு முறையா என பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி உள்ளது. மேலும் இந்த சம்பவத்தின் காட்சியும் அதில் இடம் பெற்றுள்ளது.

ஸ்மித்தின் செயலுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஆதரவு அளித்த சில மணிநேரங்களில் பிசிசிஐ தனது நிலையை தெளிப்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

‘‘விராட் கோலி முதிர்ந்த கிரிக்கெட் வீரர். பக்குவப்பட்ட வீரரும் கூட. களத்தில் அவரது நடத்தை உதாரணமாக உள்ளது. கோலியின் செயலுக்கு ஐசிசி எலைட் பேனல் நடுவர் நைஜல் லாங் உதவியாக இருந்துள்ளார்.

அவர்தான் விரைந்து செயல்பட்டு ஸ்டீவ் ஸ்மித்தை களத்தில் இருந்து வெளியேற்றி உள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பின்போது மதி மயங்கி நடந்து கொண்டதாக ஸ்மித் தெரிவித்துள்ளார். ஐசிசி இதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என பிசிசிஐ வலியுறுத்துகிறது. தொடரின் எஞ்சிய ஆட்டங்கள் உண்மையான விளையாட்டு உணர்வுடன் நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. கோலியின் முடிவில் நாங்கள் தெளிவாக உள்ளோம். அவருக்கும் அணிக்கும் ஆதரவாக இருப்போம்’’ என தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதுவும் நடந்ததா?

முதல் டெஸ்ட் போட்டி நடை பெற்ற புனே ஆடுகளத்தின் புகைப்படங்கள் மிக நெருக்கமாக ஆஸி. பத்திரிகைகளில் வெளி யானது. கேப்டன் ஸ்மித்தும் ஆடுகளத்தின் தன்மையை புட்டு புட்டுவைத்தார். அதிக பாதுகாப்பு நிறைந்த ஆடுகள பகுதியை ஆஸி. ஊடகத்தை சேர்ந்தவர்தான் புகைப்படம் எடுத்தாரா என்பதிலும் தற்போது சந்தேகம் எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x